2026 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி களமிறங்குவாரா என கோடிக்கணக்கான ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர். ஆனால், அவர்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏமாற்றமே மிஞ்சி வருகிறது. அடுத்த போட்டியான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்திற்காக சிஎஸ்கே அணியுடன் தோனி லக்னோ செல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் பயணிக்க மறுத்துவிட்டதாக வெளியாகியுள்ள தகவல் ரசிகர்களுக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தோனி ஏன் லக்னோ செல்லவில்லை? அவர் இந்த சீசனில் விளையாடுவாரா மாட்டாரா? இதன் பின்னணியில் உள்ள காரணங்களை விரிவாகப் பார்ப்போம்.
சிஎஸ்கே அணி தனது அடுத்த லீக் போட்டியில் வெள்ளிக்கிழமை லக்னோ அணியை எதிர்கொள்ள உள்ளது. இந்தப் போட்டிக்காக சிஎஸ்கே அணி நிர்வாகம் தோனிக்கும் டிக்கெட் முன்பதிவு செய்திருந்ததாக தகவல்கள் வெளியாகின. இதனால் லக்னோ மைதானத்தில் தோனியைக் காணலாம் என ரசிகர்கள் உற்சாகத்தில் இருந்தனர். ஆனால், கடைசி நேரத்தில் தோனி லக்னோ செல்ல வேண்டாம் என முடிவு செய்து அணியுடன் பயணிக்க மறுத்துவிட்டதாகத் தெரிகிறது. இது சென்னை ரசிகர்களுக்குப் பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.
இந்த சீசனில் இதுவரை சிஎஸ்கே விளையாடிய எந்தவொரு வெளிமாநில போட்டிகளுக்கும் தோனி செல்லவில்லை. ஏன், சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் உள்ளூர் போட்டிகளில் கூட அவர் மைதானத்திற்கு வருவதை தவிர்த்து வருகிறார். தோனி விளையாடாததற்கு மூன்று முக்கிய காரணங்கள் உள்ளதாகக் கூறப்படுகிறது. முதலாவதாக, ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்பே பயிற்சியின் போது தோனியின் கால் தசைநாரில் காயம் ஏற்பட்டது. முதலில் 2 வாரங்களில் அவர் குணமடைந்து விடுவார் என கூறப்பட்டாலும், அவரது காயம் மீண்டும் தீவிரமடைந்ததால் அவரது மறுபிரவேசம் தாமதமானது என தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் தெரிவித்திருந்தார்.
இரண்டாவதாக, தோனியின் உடற்தகுதி குறித்து சிஎஸ்கே பேட்டிங் பயிற்சியாளர் மைக்கேல் ஹஸ்ஸி கூறுகையில், தோனி தற்போது பேட்டிங் செய்யக்கூடிய அளவிற்கு உடற்தகுதியுடன் இருந்தாலும், மைதானத்தில் வேகமாக ஓடுவது மற்றும் விக்கெட்டுகளுக்கு இடையே சுறுசுறுப்பாக இயங்குவது போன்றவற்றில் அவருக்கு இன்னும் முழுமையான நம்பிக்கை வரவில்லை எனத் தெரிவித்துள்ளார். மூன்றாவதாக, அணிக்குள் இருக்கும் கூட்டணியை கலைக்க தோனி விரும்பவில்லை. சிஎஸ்கே அணி தற்போது 12 புள்ளிகளுடன் 5வது இடத்தில் உள்ளது. பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறத் தீவிரமாகப் போராடி வருகிறது. தற்போதைய ஆடும் லெவன் செட்டாகி விட்டதால், தொடரின் இந்த முக்கியமான கட்டத்தில் தான் உள்ளே நுழைந்து அணியின் சீரான போக்கைக் கலைக்க தோனி விரும்பவில்லை என சிஎஸ்கே நிர்வாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாகவே அணியின் கவனத்தை திசைதிருப்பாமல் இருக்க அவர் மைதானத்திற்கு வருவதைக் கூட தவிர்த்து வருகிறார். இதனால், இந்த சீசன் முழுவதும் தோனியை களத்தில் காண்பது கடினம் என்றே தெரிகிறது.