தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது. சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தமிழக வெற்றிக் கழகம் (தவெக), காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியை அமைத்தது. கடந்த மே 10-ஆம் தேதி, நடிகர் விஜய் தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார்.
முதலமைச்சர் விஜய் பதவியேற்ற பிறகு, கடந்த மே 13-ஆம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையில் அரசின் மீது நம்பிக்கைக்கோரும் தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில், அதிமுகவைச் சேர்ந்த 25 சட்டமன்ற உறுப்பினர்கள் தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர். இந்த சூழலில், மதுராந்தகம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல், பெருந்துறை தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ஜெயக்குமார், தாராபுரம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் சத்யபாமா, மற்றும் அம்பாசமுத்திரம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் இசக்கி சுப்பையா ஆகியோர் தங்களது எம்எல்ஏ பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு, தமிழக வெற்றிக் கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
இதற்கிடையே, தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்த அதிமுக எம்எல்ஏக்களை கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சார்பில் சபாநாயகரிடம் மனு ஒன்று அளிக்கப்பட்டிருந்தது. அதே சமயத்தில், அதிமுகவின் முன்னாள் அமைச்சர்களான சி.வி.சண்முகம் மற்றும் எஸ்.பி.வேலுமணி ஆகியோரின் தரப்பினர், கொறடாவின் உத்தரவை மீறி அரசுக்கு எதிராக வாக்களித்த எடப்பாடி பழனிசாமி தரப்பு அதிமுக எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி சபாநாயகரிடம் தனி மனு அளித்தனர்.
பின்னர், எடப்பாடி பழனிசாமி தரப்பு மற்றும் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் தரப்பு ஆகியோருக்கு இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றதைத் தொடர்ந்து, அவர்கள் இருவரும் சபாநாயகரிடம் அளித்திருந்த மனுக்களைத் திரும்பப் பெற்றுக் கொண்டனர். இந்த அரசியல் நகர்வுகளுக்கு மத்தியில், கரூர் தொகுதி அதிமுக எம்எல்ஏவும் முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் விராலிமலை தொகுதி அதிமுக எம்எல்ஏவும் முன்னாள் அமைச்சருமான சி.விஜயபாஸ்கர் ஆகியோர் தங்களது எம்எல்ஏ பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு, தமிழக வெற்றிக் கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
இருப்பினும், அதிமுகவின் முன்னாள் அமைச்சர்களான சி.வி.சண்முகம் மற்றும் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் தொடர்ந்து அதிருப்தியில் இருந்ததாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற மாவட்ட நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டத்தையும் அவர்கள் புறக்கணித்து வந்தனர்.
இந்த நிலையில், தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று ஆகஸ்ட் 5-ஆம் தேதி தொடங்கியது. கூட்டம் தொடங்குவதற்கு முன்பாக, சட்டப்பேரவை வளாகத்தில் அதிமுக எம்எல்ஏக்களுடன் எடப்பாடி பழனிசாமி ஒரு முக்கிய ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில், எஸ்.பி.வேலுமணி மற்றும் சி.வி.சண்முகம் ஆகியோர் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அதே சமயம், சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் எஸ்.பி.வேலுமணி மற்றும் சி.வி.சண்முகம் ஆகியோர் கலந்து கொண்டனர். இது அதிமுக வட்டாரத்தில் மேலும் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. அதிமுகவில் ஏற்பட்டுள்ள இந்த தொடர் விரிசல்கள், தமிழக அரசியலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
