தூத்துக்குடி அருகே நான்கு வழிச்சாலையில் இன்று காலை ஏற்பட்ட கோர விபத்தில், கண்டெய்னர் லாரி மற்றும் நிலக்கரி ஏற்றி வந்த லாரி நேருக்கு நேர் மோதி பள்ளத்தில் கவிழ்ந்தன. இதில் கண்டெய்னர் லாரி ஓட்டுநர் படுகாயமடைந்தார்.
சென்னையிலிருந்து கார் உதிரிபாகங்களுடன் தூத்துக்குடிக்கு வந்துகொண்டிருந்த கண்டெய்னர் லாரி, கிடங்கில் பொருட்களை இறக்கிவிட்டு மீண்டும் தூத்துக்குடி நோக்கி நான்கு வழிச்சாலையில் சென்று கொண்டிருந்தது. சென்னை சத்தியமூர்த்தி நகரைச் சேர்ந்த போர்ராஜ் (45) என்பவர் இந்த லாரியை ஓட்டிச் சென்றுள்ளார். வாலசமுத்திரம் அருகே வந்தபோது, லாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவில் இருந்த தடுப்புச் சுவரை உடைத்துக்கொண்டு எதிர் திசையில் சென்றது.
அப்போது, தூத்துக்குடியிலிருந்து திருச்சி நோக்கி நிலக்கரி ஏற்றிச் சென்ற மற்றொரு லாரி மீது கண்டெய்னர் லாரி பலமாக மோதியது. இந்த பயங்கர மோதலில் இரண்டு லாரிகளும் நிலைதடுமாறி சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்தன. இதில், கண்டெய்னர் லாரி ஓட்டுநர் போர்ராஜ் இடிபாடுகளுக்குள் சிக்கி படுகாயமடைந்தார். அதிர்ஷ்டவசமாக, நிலக்கரி லாரி ஓட்டுநர் ஓட்டப்பிடாரம் இந்திரா நகரைச் சேர்ந்த மாரிச்செல்வம் (28) காயமின்றி உயிர் தப்பினார்.
விபத்து குறித்து தகவல் அறிந்த புதியம்புத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து, படுகாயமடைந்த போர்ராஜை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து தொடர்பாக புதியம்புத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த துயர சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.