மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே, காதல் திருமணம் செய்துகொண்ட இளம்பெண் ஒருவர் வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதால் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மாங்கனாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ஜோதிமாறன் (25) மற்றும் சரண்யா (23) இருவரும் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. இந்நிலையில், கடந்த சில நாட்களாக இருவருக்கும் இடையே குடும்பப் பிரச்சினை இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
சம்பவத்தன்று, மாங்கனாம்பட்டு கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டில் சரண்யா தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இது தொடர்பாக சரண்யாவின் தந்தை ராஜேந்திரன், கொள்ளிடம் ஆணைக்காரன்சத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், தனது மகள் சரண்யாவை கணவர் ஜோதிமாறன் வரதட்சணை கேட்டுத் துன்புறுத்தியதாகவும், மனமுடைந்த நிலையில் அவர் தற்கொலை செய்துகொண்டதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
புகாரின்பேரில், காவல்துறையினர் சரண்யாவின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு உடலைப் பெற உறவினர்கள் மறுத்து, ஜோதிமாறனைக் கைது செய்ய வலியுறுத்தி தர்ணாவில் ஈடுபட்டனர். காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. பின்னர், காவல்துறையினர் ஜோதிமாறனைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். திருமணமான ஒன்றரை ஆண்டுகளில் நடந்த இந்த துயரச் சம்பவத்திற்கு வரதட்சணைக் கொடுமைதான் காரணமா என்பது குறித்து சீர்காழி உதவி ஆட்சியர் சுரேஷ் விசாரணை நடத்தி வருகிறார்.