சூர்யா, திரிஷா நடிப்பில் உருவாகியுள்ள 'கருப்பு' திரைப்படம் நாளை (மே 14) திரைக்கு வருகிறது. இந்தப் படத்தின் விளம்பர நிகழ்ச்சிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், நேற்று திருவனந்தபுரத்தில் நடைபெற்ற 'கருப்பு' படத்தின் பிரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி, கேரளா மற்றும் தமிழ்நாட்டின் அரசியல் சூழல் குறித்துப் பேசினார்.
'கருப்பு' திரைப்படம், ஒரு நீதிமன்ற வழக்கையும், அதில் கடவுள் நம்பிக்கைகளையும் மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இதில் சூர்யா நாயகனாகவும், திரிஷா கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். மேலும் சுவாசிகா, இந்திரன்ஸ், யோகி பாபு, ஷிவாதா, சுப்ரீத் ரெட்டி, அனகா மாயா ரவி மற்றும் நட்டி நட்ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில், சாய் அபயங்கர் இசையில் இந்தப் படம் உருவாகியுள்ளது.
நிகழ்ச்சியில் பேசிய ஆர்.ஜே.பாலாஜி, "கேரளாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் நிறைய ஒற்றுமைகள் இருக்கின்றன. எங்கள் மாநிலத்தில் பல கட்சிகளில் இருந்தவர்கள் முதலமைச்சராக வர முயற்சித்தார்கள். ஆனால் உங்கள் மாநிலத்தில் ஒரே கட்சியிலேயே பலர் முதலமைச்சராக வர முயற்சிக்கிறார்கள்" என்று குறிப்பிட்டார். மேலும், "எங்களுக்கு ஒரு நல்ல முதலமைச்சர் கிடைத்திருக்கிறார். உங்களுக்கும் ஒரு நல்ல முதலமைச்சர் கிடைப்பார் என்று நம்புகிறேன்" என்றும் அவர் தெரிவித்தார்.
'கருப்பு' திரைப்படம் நாளை உலகம் முழுவதும் வெளியாகிறது. இந்தப் படத்தின் விளம்பரப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், ஆர்.ஜே. பாலாஜியின் இந்தக் கருத்துக்கள் அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளன.
