புதுடெல்லி: கர்நாடகாவின் பெங்களூருவில் உள்ள ஒரு முன்னணி மென்பொருள் நிறுவனத்தில் ஆண்டுக்கு ரூ.30 லட்சம் சம்பளத்தில் பணியாற்றி வந்த ரவி ரத்தோர் (31) என்பவர், நூற்றுக்கணக்கான முதலீட்டாளர்களிடம் இருந்து சுமார் ரூ.100 கோடி மோசடி செய்த குற்றச்சாட்டில் டெல்லி காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்பு பணியில் இருந்து விலகிய இவர், ஒரு போலி ஆன்லைன் டிரேடிங் தளத்தை தொடங்கி முதலீட்டாளர்களை ஏமாற்றியுள்ளார்.
டெல்லியைச் சேர்ந்த ஒரு முதலீட்டாளர் அளித்த புகாரின் அடிப்படையில் டெல்லி போலீஸார் இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையின் முடிவில், ரவி ரத்தோர் மத்திய பிரதேசத்தின் சனாவாத் நகரில் சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கால் சென்டரை நிறுவி, அதன் மூலம் நாடு முழுவதும் உள்ள பங்குச் சந்தை முதலீட்டாளர்களை குறிவைத்து இந்த மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. முதற்கட்ட விசாரணையில், இவர் நடத்திய போலி ஆன்லைன் டிரேடிங் தளம் மூலம் ரூ.99.77 கோடி வரை மோசடி செய்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த மோசடி மூலம் சம்பாதித்த பணத்தைக்கொண்டு, ரவி ரத்தோர் மத்திய பிரதேசத்தின் இந்தூரில் ஒரு ஆடம்பர மாளிகையைக் கட்டியுள்ளார். மேலும், ஏராளமான அடுக்குமாடி குடியிருப்புகளையும், சொகுசு கார்களையும் வாங்கி குவித்துள்ளார். தற்போது, அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட லேப்டாப்கள் மற்றும் மொபைல் போன்கள் காவல்துறையினரால் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. இந்த வழக்கில் மேலும் பல தகவல்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பங்குச் சந்தை முதலீடுகளில் அதிக லாபம் ஈட்டலாம் என்ற ஆசையில், இதுபோன்ற போலி ஆன்லைன் தளங்களில் முதலீடு செய்வோர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. முதலீடு செய்வதற்கு முன், தளத்தின் நம்பகத்தன்மையை உறுதி செய்வதுடன், உரிய ஆவணங்களை சரிபார்ப்பது அவசியம்.