கவிஞர் வைரமுத்து தனது சொந்த ஊரான தேனி மாவட்டம் பெரியகுளம் அருகேயுள்ள வடுகபட்டிக்கு சென்றார். அங்குள்ள தனது விவசாய நிலத்தில் உலா வந்து இளைப்பாறியபோது, தனது இளமைக்கால நினைவுகளை நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்து ஒரு கவிதையை படைத்துள்ளார்.
அந்தக் கவிதையில், 'இந்த நிலம் தான், நான் முதல் கவிதை எழுதிய இடம். 11 வயதில் மூளைக்குள் ஒரு மொழி மேகம் திரண்டதும், துளித்துளியாய் தூறலிட்டதும் இந்த விவசாய வெளியில் தான். தலைக்கு மேல் அதே வானம். காலுக்கு கீழ் அதே பூமி. ஆனால் அதே நான் அல்ல. அன்று பாடிய பறவை இன்றில்லை. சுற்றியுள்ள மரங்களை போலவே, என் தலையும் குறைந்திருக்கிறது' என்று தனது இளமைக் காலத்தையும் தற்போதைய நிலையையும் ஒப்பிட்டுள்ளார்.
மேலும், 'ஆனால் எனக்குள் தமிழ் தூண்டிவிட்ட துளி தீ அதே சுடரோடு, அணையாமல் இருக்கிறது. என் முதல் நிலமே, அணையாமல் காத்திரு, நீ மூட்டிக்கொடுத்த முதல் தீயை. இன்னும் இன்னும் எரியவிடு, எரிமலைகள் சிதறவிடு. சுத்த நெருப்பால் என்னை சூரியன் செய். ஆட்சிகள், காட்சிகள், காலம், கடவுளும் மாறலாம். தமிழும், நானும் மாறாமல் பார். கட்டை நெருப்பு காணும் வரை நெற்றி நெருப்பு அணையாமல் காத்திரு. உடலை முறுக்கேற்று, உயிரை பன்மை செய். வணங்குகிறேன் மண்ணை. வாழ்த்து நீ என்னை' என்றும் உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார். தனது வாழ்வின் முதல் கவிதை பிறந்த இந்த மண்ணை வணங்குவதாகவும், இந்த தமிழ் தீ அணையாமல் தன்னுள்ளே எரிந்துகொண்டிருப்பதாகவும் நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
கவிஞர் வைரமுத்துவின் இந்த வரிகள், அவரது தமிழ் மீதும், தனது மண்ணின் மீதும் கொண்ட பற்றை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. தமிழ் மொழியின் மீது அவர் கொண்டுள்ள அணையாத காதலை இது காட்டுகிறது. தனது வாழ்வின் இறுதிவரை இந்த தமிழ் தீ அணையாமல் தன்னுள்ளே எரியும் என்றும், மண்ணை வணங்குவதாகவும் அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.