தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தனது எக்ஸ் சமூக வலைத்தளப் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது: 'கடந்த மே 3ஆம் தேதி நாடு முழுவதும் நடத்தப்பட்ட நீட் தேர்வு, வினாத்தாள் கசிந்த காரணத்தால் ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசின் தேர்வு முகமை (National Testing Agency) அறிவித்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் மத்திய அரசுக்கு எங்களின் கடும் கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.'
லட்சக்கணக்கான மாணவர்கள் மருத்துவராகும் தங்கள் கனவை நனவாக்க இரவும் பகலும் அயராது உழைத்தனர். பெற்றோர்களோ, கடன் வாங்கியும், நகைகளை அடகு வைத்தும் தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்திற்காகப் பல தியாகங்களைச் செய்தனர். ஆனால், அவர்களுக்குக் கிடைத்தது என்னவோ நிர்வாக அலட்சியம், முறைகேடுகள் மற்றும் கல்வி அமைப்பின் மீதான நம்பிக்கையின்மை மட்டுமே.
இந்த நிலைமை ஒரு சாதாரண தவறு கிடையாது. இது மாணவர்களின் எதிர்காலத்துடன் விளையாடப்பட்ட மிகப் பெரிய அநீதி. நாட்டின் கல்வி அமைப்பின் நம்பகத்தன்மையைக் கேள்விக்குறியாக்கிய இந்தச் சம்பவத்திற்குப் பொறுப்பானவர்களை உடனடியாகக் கண்டறிந்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்ட நாளிலிருந்து முறைகேடுகள் தொடர்ந்து நடைபெறுவது வாடிக்கையாகிவிட்டது. மாணவர்களின் மன உளைச்சல், பெற்றோரின் வேதனை மற்றும் அவர்களின் கடின உழைப்பைப் மதிக்கும் வகையில், மத்திய பா.ஜ.க. அரசு உடனடியாக நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.