இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்காக தேசிய தேர்வு முகமை (NTA) நடத்திய நீட் தேர்வு கடந்த மே மாதம் 3-ஆம் தேதி நடந்தது. இந்தத் தேர்வில் நாடு முழுவதும் சுமார் 22 லட்சம் மாணவர்கள் கலந்துகொண்டனர்.
இந்நிலையில், இந்த ஆண்டு நடந்த நீட் தேர்வு ரத்து செய்யப்படுவதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. மத்திய அரசின் ஒப்புதலுடன் நீட் தேர்வு ரத்து செய்யப்படுவதாகவும், மறுதேர்வுக்கான தேதிகள் விரைவில் வெளியிடப்படும் என்றும் தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு மாணவர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேர்வுக்குச் சில நாட்களுக்கு முன்பே ராஜஸ்தானில் நீட் தேர்வு வினாத்தாள் கசிந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. மே 1-ஆம் தேதியே ராஜஸ்தானின் சிகார் பகுதியில் இந்த வினாத்தாள் பரவத் தொடங்கியுள்ளது. இது மாணவர்களிடம் 20,000 ரூபாய் முதல் 2 லட்சம் ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டிருக்கிறது.
கையால் எழுதப்பட்ட இந்த மாதிரி வினாத்தாள் பிரதியில் மொத்தம் 281 கேள்விகள் இடம்பெற்றிருந்தன. மே 3 அன்று நடந்த அசல் நீட் தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளில் 135 கேள்விகள், இந்த மாதிரி தாளில் இருந்த கேள்விகளுடன் அப்படியே பொருந்திப் போயின. இதில் 90 உயிரியல் கேள்விகளும், 45 வேதியியல் கேள்விகளும் அப்படியே இடம்பெற்றிருந்தன.
இதன் மூலம், மொத்தமுள்ள 720 மதிப்பெண்களில் 600 மதிப்பெண்களுக்கான கேள்விகள் தேர்வுக்கு முன்னரே கசிந்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. ராஜஸ்தான் காவல்துறை இந்த மாதிரி வினாத்தாளைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறது.
இந்த முறைகேட்டின் பின்னணியில், கேரளாவில் உள்ள ஒரு மருத்துவக் கல்லூரியில் படிக்கும் ராஜஸ்தான் மாநிலம் சூருவைச் சேர்ந்த ஒரு எம்பிபிஎஸ் மாணவருக்குத் தொடர்பு இருப்பதாகக் காவல்துறை சந்தேகிக்கிறது. அவர்தான் மே 1 அன்று சிகாரில் உள்ள தனது நண்பருக்கு இந்தத் தகவலைப் பகிர்ந்திருக்கிறார். அங்கிருந்து விடுதிகள் மற்றும் பயிற்சி மையங்கள் வழியாக இது காட்டுத்தீயாகப் பரவியுள்ளது. மேலும், வாட்ஸ்அப் போன்ற செயலிகள் மூலம் இந்த வினாத்தாள் பலமுறை பகிரப்பட்டுள்ளது. இது மிக அதிக எண்ணிக்கையிலான மாணவர்களைத் தேர்வுக்கு முன்னரே சென்றடைந்திருக்கலாம் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த முறைகேடு தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள தேசிய தேர்வு முகமை, தேர்வு முடிந்த நான்கு நாட்களுக்குப் பிறகுதான் முறைகேடு குறித்த தகவல் தங்களுக்குக் கிடைத்ததாகத் தெரிவித்துள்ளது.
விசாரணை அமைப்புகளின் ஆதாரங்களின் அடிப்படையில் வெளிப்படையான முறையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்திருந்த நிலையில், தற்போது தேர்வை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது.
மேலும், வினாத்தாள் கசிந்தது குறித்து சிபிஐ விசாரணை நடத்தப்பட உள்ளது.
ஒருவேளை இந்தத் தேர்வு ரத்து செய்யப்படாமல் இருந்திருந்தால், வினாத்தாள் கசிவு காரணமாக நீட் தேர்வின் தரவரிசைப் பட்டியலிலும், மருத்துவச் சேர்க்கையிலும் மிகப்பெரிய தாக்கம் ஏற்பட்டிருக்கும் என்பதாலேயே தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.