ஐபிஎல் 2026 தொடர் மிகுந்த பரபரப்புடன் நடந்துகொண்டிருக்கிறது. மைதானத்தில் பவுண்டரிகளும் சிக்ஸர்களும் மழையாகப் பொழிந்தாலும், மறுபக்கத்தில் கேப்டன்களின் பாக்கெட்டுகள் அபராதத்தால் காலியாகி வருகின்றன.
அண்மையில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணித்தலைவர் அக்சர் படேல், மெதுவான ஓவர் வீச்சு விகித விதிமீறலில் சிக்கியுள்ளார். நேற்றைய பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான சிறப்பான வெற்றியை டெல்லி அணி கொண்டாடிக்கொண்டிருந்த நிலையில், ஐபிஎல் நிர்வாகம் அவர்களுக்கு ஒரு அதிர்ச்சிச் செய்தியை வெளியிட்டது. நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் பந்துவீசி முடிக்காத காரணத்திற்காக அக்சர் படேலுக்கு ரூ. 12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த சீசனில் மெதுவான ஓவர் வீச்சு விகிதம் என்பது அணிகளுக்குப் பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. அக்சர் படேல் மட்டும் இதில் மாட்டிக்கொள்ளவில்லை. அவருக்கு முன்பாகவே 5 கேப்டன்கள் இந்த அபராதப் பட்டியலில் இடம்பிடித்துள்ளனர்.
ஸ்ரேயாஸ் ஐயர், சுப்மன் கில், ருதுராஜ் கெய்க்வாட், ஹர்திக் பாண்டியா, அஜிங்க்யா ரஹானே ஆகியோர் ஏற்கனவே இந்த பட்டியலில் உள்ளனர். அக்சர் படேல் இந்த விதிமீறலில் சிக்கிய ஆறாவது கேப்டன் ஆவார்.