தமிழ்நாட்டின் காவிரி நீர் உரிமையை விட்டுத்தர ஒருபோதும் மாட்டோம் என்றும், காவிரி நீர் உரிமை என்பது அரசியல் சார்ந்த பிரச்சனை அல்ல, அது மக்களின் வாழ்வுரிமை என்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். த.வெ.க அரசு, காவிரி டெல்டா விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், காவிரி நதிநீர் மற்றும் மேகதாது அணை பிரச்சினை தொடர்பாக தற்போதைய முதலமைச்சர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று எழுப்பியுள்ள கேள்விகள் உண்மைக்கு புறம்பானவை என்று குறிப்பிட்டுள்ளார். காவிரி நதிநீர் பிரச்சினை, டெல்டா மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரம், மாநிலத்தின் குடிநீர் பாதுகாப்பு மற்றும் தமிழ்நாட்டின் சட்டப்பூர்வ நீர் உரிமையைப் பாதுகாப்பதில் தமிழ்நாடு அரசு தொடர்ச்சியான மற்றும் உறுதியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் வலியுறுத்தினார்.
இதன் ஒரு பகுதியாக, கடந்த மே 27, 2026 அன்று, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பாரதப் பிரதமர் அவர்களை நேரில் சந்தித்து, காவிரி நீர் பகிர்வு, கர்நாடக அரசின் மேகதாது அணைத் திட்டம் மற்றும் அதனால் டெல்டா விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார். காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு மற்றும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு முழுமையாக அமல்படுத்தப்பட வேண்டும் என்றும், மேகதாது அணைக்கு அனுமதி வழங்கக்கூடாது என்றும் பிரதமரிடம் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், ஜூன் 19, 2026 அன்று, பாரதப் பிரதமர் அவர்களுக்கு முதலமைச்சர் விரிவான கடிதம் ஒன்றை அனுப்பினார். அதில், கர்நாடக அரசு மேகதாது அணைக்கான பூமி பூஜை நடத்த அறிவித்திருப்பது, காவிரி நடுவர் மன்ற மற்றும் உச்ச நீதிமன்ற தீர்ப்புகளுக்கு முரணானது என சுட்டிக்காட்டினார். மேலும், தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் ஒப்புதல் இன்றி இத்திட்டத்திற்கு அனுமதி வழங்கக்கூடாது என்றும், ஜல் சக்தி அமைச்சகம் மற்றும் மத்திய நீர்வள ஆணையத்திற்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்குமாறும் பிரதமரிடம் கோரியுள்ளார்.
அதே நாளில், கர்நாடக அரசின் மேகதாது அணை கட்டும் ஒருதலைப்பட்ச முயற்சிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து, அதன் திட்ட அறிக்கைக்கும் (DPR) ஜல் சக்தி அமைச்சகம் அனுமதி வழங்கக்கூடாது என வலியுறுத்தினார். மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் தகராறு சட்டம், 1956-இன் கீழ் நடுவர் மன்றத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும் என்றும், கர்நாடக அரசின் DPR-ஐ மத்திய நீர்வள ஆணையம் பரிசீலிக்கவோ, செயல்படுத்தவோ கூடாது என்றும், இணை ஆற்றுப்படுகை மாநிலங்களின் ஒப்புதல் இன்றி எந்த திட்டமும் மேற்கொள்ள வேண்டாம் என்றும் ஒன்றிய அரசு கர்நாடக அரசுக்கு அறிவுறுத்த வேண்டும் என்றும் தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் முதலமைச்சர் கடிதம் மூலம் பிரதமரிடம் கோரியுள்ளார்.
தமிழ்நாடு நீர்வளத்துறை, காவிரி நீர் மேலாண்மை ஆணையம் (CWMA) மற்றும் காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு (CWRC) கூட்டங்களில் தொடர்ந்து தமிழ்நாட்டின் உரிமைகளை வலியுறுத்தி வருகிறது. தமிழ்நாட்டிற்குரிய நீரை உரிய காலத்தில் திறந்துவிட வேண்டும் என்பதையும், கர்நாடக அரசின் ஒருதலைப்பட்ச நடவடிக்கைகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்பதையும் தொடர்ந்து பதிவு செய்து வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க ஆட்சியில், மேகதாது அணை திட்ட அறிக்கையை எதிர்த்து தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் 13.11.2025 அன்று தள்ளுபடி செய்தது. அதன் பின்னர் தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுவும், மறுசீராய்வு மனுவும் முறையே 15.04.2026 மற்றும் 25.04.2026 அன்று உச்ச நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டன. இந்த சட்டக் குளறுபடிகளே காவிரி நதி நீர் பிரச்சினை மற்றும் மேகதாது அணை விவகாரம் மிகப்பெரிய சோதனையாக உருவெடுக்கக் காரணம் என ஆதவ் அர்ஜூனா சுட்டிக்காட்டினார்.
கடந்த கால தவறுகளைப் பேசுவதன் மூலம் காவிரி நதி நீர் விவகாரத்தில் தமிழகத்தின் உரிமைக் குரலை திசைதிருப்ப நாங்கள் விரும்பவில்லை என்றும், குறுகிய அரசியல் நோக்கம் தங்களுக்கு இல்லை என்றும் அவர் கூறினார். அதே நேரத்தில், முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அல்லது வேறு யாரிடமிருந்தும் ஆக்கப்பூர்வமான விமர்சனங்கள் வந்தால், அவற்றை கவனத்தில் கொள்ளவும், ஏற்றுக்கொள்ளவும் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார். காவிரி நீர் உரிமை என்பது அரசியல் சார்ந்த பிரச்சனை அல்ல, அது தமிழ்நாட்டு மக்களின் வாழ்வுரிமை, டெல்டா விவசாயிகளின் எதிர்காலம் மற்றும் மாநிலத்தின் நீராதார பாதுகாப்புடன் தொடர்புடைய அடிப்படை உரிமைப் பிரச்சினை என்றும், இதில் குறுகிய அரசியல் நோக்கத்துடன் செயல்படவில்லை என்றும், மாண்புமிகு முதலமைச்சர் திரு.சி.ஜோசப் விஜய் அவர்களின் தலைமையிலான அரசு, காவிரி நடுவர் மன்ற மற்றும் உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் முழுமையாக அமல்படுத்தப்படும் வரை தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்ட அனைத்து நடவடிக்கைகளையும் தொடர்ந்து எடுத்து வருவதாகவும் அவர் உறுதிபடக் கூறினார்.
