தமிழக சட்டமன்றத் தேர்தலில் சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் தொகுதியில் திமுக வேட்பாளராகப் போட்டியிட்டவர் பெரியகருப்பன். அவரை எதிர்த்து த.வெ.க. சார்பில் போட்டியிட்ட சீனிவாச சேதுபதி, ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்ததை எதிர்த்து பெரியகருப்பன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், நாளை நடைபெறவிருக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பில் சீனிவாச சேதுபதி பங்கேற்கக் கூடாது என தடை விதித்தது.
உயர்நீதிமன்றத்தின் இந்த தடையை எதிர்த்து சீனிவாச சேதுபதி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். அதேசமயம், பெரியகருப்பன் தரப்பில் கேவியட் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், தங்கள் தரப்பு வாதத்தைக் கேட்காமல் எந்த உத்தரவையும் பிறப்பிக்கக் கூடாது என்று கோரப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தின் திருப்பத்தூர் தொகுதிக்கான ஒரு தபால் வாக்கு, திருப்பத்தூர் மாவட்டத்தின் திருப்பத்தூர் தொகுதிக்குத் தவறுதலாகச் சென்றுவிட்டதாகவும், அதை தேர்தல் அதிகாரி நிராகரித்துவிட்டதாகவும் பெரியகருப்பன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
