தமிழக சட்டப்பேரவையின் இரண்டாம் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், ஜே.சி.டி. பிரபாகர் சபாநாயகராகப் பொறுப்பேற்றுக்கொண்டார். அதேபோல், ரவிசங்கர் துணை சபாநாயகராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சபாநாயகராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜே.சி.டி. பிரபாகரை, அவை முன்னவரும் எதிர்க்கட்சித் தலைவரும் சபாநாயகர் இருக்கையில் அமரவைத்தனர். புதிய சபாநாயகருக்கு சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் வாழ்த்து தெரிவித்தனர்.
அப்போது பேசிய தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், "இது ஒரு மாண்புமிகு அவை. முன்னாள் முதல்வர்கள் சிறப்பாக ஆட்சி நடத்தியுள்ளனர். சபாநாயகர் ஆணாக இருந்தாலும், இந்த சபைக்குத் தாயைப் போல இருந்து அனைவருக்கும் சம வாய்ப்பு வழங்க வேண்டும். திரையுலகில் விஜய்க்கு அண்ணன் விஜயகாந்த். விஜயகாந்த் கூறியது போலவே, சட்டமன்றத்தின் அனைத்து நிகழ்வுகளையும் நேரடியாக ஒளிபரப்ப வேண்டும். தமிழ்நாட்டில் இனி நடைபெறும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம் அளியுங்கள்" என்று முதலமைச்சர் விஜயிடம் கோரிக்கை விடுத்தார்.