தமிழகத்தில் தற்போது 4,829 டாஸ்மாக் மதுபானக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதன் மூலம் மாதந்தோறும் சுமார் 4 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு மது விற்பனை நடக்கிறது. கடந்த நிதியாண்டில் மட்டும் மதுபான விற்பனை மூலம் அரசுக்கு 48 ஆயிரத்து 344 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. இருப்பினும், மதுப்பழக்கத்தால் பல குடும்பங்கள் சீரழிந்து வருவதால், முழுமையான மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாகவே இருந்து வருகிறது.
இந்தச் சூழலில், தமிழகத்தில் உள்ள 717 டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கு முதலமைச்சர் விஜய் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி, வழிபாட்டுத் தலங்களுக்கு அருகில் உள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்களுக்கு அருகேயுள்ள 186 கடைகள், அத்துடன் பேருந்து மற்றும் ரயில் நிலையங்களுக்கு 500 மீட்டர் தொலைவுக்குள் இயங்கி வரும் 255 டாஸ்மாக் கடைகள் என மொத்தம் 717 கடைகளை இரண்டு வாரங்களுக்குள் மூட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், 717 மதுபானக் கடைகளை மூட அனுமதியளித்த முதலமைச்சர் விஜய்க்கு பல்வேறு தரப்பினரிடமிருந்தும் பாராட்டுதல்களும் வாழ்த்துகளும் வந்து குவிகின்றன. அந்த வரிசையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன், தனது வாழ்த்துகளைத் தெரிவித்து ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அந்தப் பதிவில் குறிப்பிட்டிருப்பதாவது:
“வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு அருகில் உள்ள மதுபானக் கடைகளை அகற்ற வேண்டும் என்பது தமிழ்க் குடும்பங்களின் நீண்டகால எதிர்பார்ப்பாக இருந்தது. இந்த முக்கியமான நடவடிக்கையை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், தம்பி விஜய் அவர்கள் ஆட்சிக்கு வந்த உடனேயே எடுத்திருக்கிறார்.
மதுபானம் விற்பது என்பது ஒரு அரசாங்கத்தின் வேலையாக ஒருபோதும் இருக்கக்கூடாது. மாறாக, மதுப் பழக்கத்தைக் கட்டுப்படுத்தும் பொறுப்பைத்தான் அரசு மேற்கொள்ள வேண்டும். இந்த இலக்கை நோக்கி தமிழ்நாடு அரசு பயணிக்க வேண்டும். இன்று 717 மதுக்கடைகளை மூடியது ஒரு தொடக்கமாகவே இருக்கிறது. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்பட வேண்டும். இந்த நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்பட வேண்டும்.”
