ஜிம்பாப்வேக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் ஆல் ரவுண்டர் சிவம் துபே தனது இடத்தை தக்க வைத்துக் கொண்டதை முன்னாள் இந்திய கேப்டன் ஸ்ரீகாந்த் கடுமையாக விமர்சித்துள்ளார். 2024 மற்றும் 2026 ஆம் ஆண்டுகளில் இந்திய அணி தொடர்ந்து டி20 உலகக் கோப்பை பட்டங்களை வெல்ல உதவிய போதிலும், 33 வயதான அவரது சமீபத்திய ஆட்டம் மோசமாக உள்ளது.
இங்கிலாந்துக்கு எதிரான கடந்த டி20 தொடரில் ஐந்து போட்டிகளில் விளையாடிய துபே, 130.76 ஸ்டிரைக் ரேட்டுடன் வெறும் 21.25 சராசரியை மட்டுமே பெற்று கடுமையாக தடுமாறினார். மேலும், ஐபிஎல் மற்றும் சர்வதேச போட்டிகளில் பல எளிதான கேட்சுகளை தவறவிட்டதால் பலவீனமான ஒரு பீல்டராகவே அவர் தொடர்கிறார்.
இது குறித்து யூடியூப் சேனலில் பேசிய ஸ்ரீகாந்த், 'அவருக்கு என்ன மாதிரியான அதிர்ஷ்டம் இருக்கிறது என்று தெரியவில்லை. அவர் அணியில் இருந்து நீக்கப்படுவதே இல்லை. இடி இடித்தாலும், மின்னல் வெட்டினாலும் சிவம் துபே எப்போதும் அணியில் இருப்பார். பேட்டிங் மற்றும் பௌலிங் மட்டுமே ஒரு கிரிக்கெட் வீரரை முழுமையாக்காது. இன்றைய கிரிக்கெட்டில் பீல்டிங் என்பது மிக முக்கியமான அம்சமாகும்' என்று கூறினார்.
'பீல்டிங்கை கணக்கில் கொண்டால் துபேவுக்கு பூஜ்ஜியம் தான் கிடைக்கும். பிறகு எந்த அடிப்படையில் அவர் தொடர்ந்து தேர்வு செய்யப்படுகிறார்? ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்ட எத்தனையோ இளம் வீரர்கள் வாய்ப்புக்காக காத்திருக்கிறார்கள்' என்றும் அவர் சாடினார்.
ஒட்டுமொத்தமாக, 71 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள துபே 29.50 சராசரியிலும், கிட்டத்தட்ட 152 ஸ்டிரைக் ரேட்டிலும் ரன்களை குவித்துள்ளார். பந்துவீச்சிலும் பங்களித்துள்ள அவர், 9.79 எகானமி ரேட்டைக் கொண்டிருந்தாலும் 26.22 சராசரியுடன் 36 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
மற்றொருபுறம், 15 வயதான இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியை அணியில் இருந்து நீக்காமல், தொடர்ந்து பல போட்டிகளில் விளையாட இந்திய அணி நிர்வாகம் வாய்ப்பளிக்க வேண்டும் என்று ஸ்ரீகாந்த் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து பேசிய ஸ்ரீகாந்த், 'அவருக்கு பிளேயிங் லெவனில் தொடர்ந்து 10 போட்டிகளில் வாய்ப்பளிக்கப்பட வேண்டும். மூன்று போட்டிகளோடு அவரை நிறுத்தக்கூடாது. இந்த தொடரின் மூன்று போட்டிகளிலும் அவருக்கு முழுமையான வாய்ப்பளித்து, அச்சமின்றி விளையாடச் சொன்னால், அவர் நிச்சயம் இந்தியாவிற்கு இரண்டு போட்டிகளை வென்று தருவார்' என்றார்.
'இவர் எல்லாம் இந்திய அணியில் விளையாட போகிறாரா? அவ்வளவு ஈஸி ஆயிடுச்சா?' என்று ஸ்ரீகாந்த் கடுமையாக விமர்சித்தார். அவரிடம் நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். இந்தத் தொடரில் அவர் பெரிய அளவில் ரன்களை குவிக்க வேண்டும் என்று நான் இறைவனை பிரார்த்திக்கிறேன். அவர் டி20 அணியில் நிரந்தர இடம்பிடிக்க வேண்டும், எதிர்காலத்தில் ஒருநாள் போட்டியிலும் விளையாட வேண்டும் என்பதே என் விருப்பம்' என்றும் அவர் தெரிவித்தார்.
