கர்நாடக மாநிலம் டாண்டேலியில் உள்ள ஒரு தனியார் ரிசார்ட்டில் ஜிப்லைன் சவாரியின் போது பாதுகாப்புப் பூட்டு செயலிழந்ததால், 24 வயது சுற்றுலாப் பயணி ஒருவர் சுமார் 40 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் ஜூலை 3 அன்று ஸ்டெர்லிங் ரிவர் ரிசார்ட்டில் நிகழ்ந்துள்ளது.
விஜயபுராவைச் சேர்ந்த குபேர் சுர்பூர் என்பவர் ஜிப்லைனில் சென்றுக் கொண்டிருந்தபோது, பாதுகாப்புக்காக இருந்த கொக்கி அறுந்து விழுந்துள்ளது. இதனால், அவர் 40 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்தார். இந்த விபத்தில் குபேர் சுர்பூரின் கால், கை என பல இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவரை மீட்ட அப்பகுதி மக்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பல அறுவை சிகிச்சைகளும் செய்யப்பட்டுள்ளன.
இந்தச் சம்பவம் தொடர்பான பதறவைக்கும் வீடியோ ஒன்றும் வெளியாகி இணையத்தில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது. அந்த வீடியோவில், இளைஞர் ஜிப்லைனில் சென்றுக் கொண்டிருந்தபோது, பாதுகாப்பு கயிறு அறுந்து கீழே விழும் காட்சிகள் பதிவாகி உள்ளன. இது பார்ப்போரை உலுக்கியுள்ளது.
காயம் அடைந்த இளைஞரின் குடும்பத்தினர், இந்த விபத்துக்கு ரிசார்ட்டில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாததே காரணம் என்று குற்றம் சாட்டியுள்ளனர். மேலும், அவரது மருத்துவ சிகிச்சைக்கான செலவை ரிசார்ட் ஏற்கும் என்று முதலில் உறுதியளித்ததாகவும், ஆனால் பின்னர் அந்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்றும் அவர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.
இந்த விபத்து குறித்து ரிசார்ட் நிர்வாகம் தரப்பிலும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இது ஒரு துரதிர்ஷ்டவசமான விபத்து என்றும், விபத்து நடந்த நேரத்தில் பரிந்துரைக்கப்பட்ட அனைத்து பாதுகாப்பு நெறிமுறைகளும் முறையாகப் பின்பற்றப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் சுற்றுலாப் பயணிகளிடையே பெரும் அச்சத்தையும், பீதியையும் ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற சாகச விளையாட்டுகளில் ஈடுபடும்போது, பாதுகாப்பு விதிமுறைகள் கடுமையாகப் பின்பற்றப்பட வேண்டும் என்றும், உபகரணங்கள் முறையாகப் பராமரிக்கப்பட வேண்டும் என்றும் பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர். எதிர்காலத்தில் இதுபோன்ற விபத்துகள் நிகழாமல் தடுக்க, சாகச விளையாட்டு வசதிகளைக் கடுமையாக ஆய்வு செய்ய வேண்டும் என்ற குரல்களும் வலுத்துள்ளன.
குபேர் சுர்பூரின் குடும்பத்தினர், ரிசார்ட் நிர்வாகத்தின் அலட்சியத்தால் தங்கள் மகன் பாதிக்கப்பட்டதாகவும், உரிய இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சாகச விளையாட்டுகளின்போது பாதுகாப்பு அம்சங்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டியதன் அவசியத்தை இந்த சம்பவம் மீண்டும் ஒருமுறை உணர்த்தியுள்ளது. சுற்றுலாப் பயணிகள் தங்கள் பாதுகாப்பை உறுதி செய்துகொள்ள அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்.
