கர்நாடக அரசின் மேகதாது அணைத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தமிழகத்தின் காவிரி நீர்வளத்தைப் பாதுகாக்கவும் வலியுறுத்தி, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பிலிகுண்டுலுவில் இருந்து பூம்புகார் வரை நடைப்பயணத்தைத் தொடங்கியுள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'கர்நாடகாவில் மேகதாது அணையை கட்டக்கூடாது என்பதே எங்கள் நோக்கம். இது இயற்கைக்கும் சுற்றுச்சூழலுக்கும் எதிரானது. தமிழகத்தின் உயிர்நாடியாக காவிரி விளங்குகிறது. விவசாயிகள் காவிரி நீரை நம்பியே வாழ்கின்றனர். மேகதாது அணை கட்டப்பட்டால், தமிழகத்திற்கு குடிநீருக்கே தட்டுப்பாடு ஏற்படும். கழிவுநீர் கூட தமிழ்நாட்டிற்கு வராது, மேட்டூர் அணைக்கும் நீர் கிடைக்காது. தமிழ்நாட்டின் குடிநீர் ஆதாரம் பாதிக்கப்படும் என்பதால், ஜல்லிக்கட்டு போராட்டத்தைப் போல இளைஞர்கள் அனைவரும் இந்த விஷயத்தில் முன்வர வேண்டும்' என்று வலியுறுத்தினார்.
மேலும், மேகதாது அணை விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி குரல் கொடுக்க வேண்டும் என்றும், கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமாரிடம் பேசி அணை கட்டும் திட்டத்தை நிறுத்த வலியுறுத்த வேண்டும் என்றும் அன்புமணி ராமதாஸ் கேட்டுக்கொண்டார். கேரள மாநிலத்திடம் இருந்து நாம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். ராகுல் காந்தியுடன் தனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை என்றும், ராகுல்காந்தியின் எண்ணமும் தனது எண்ணமும் ஒன்றுதான் என்றும் அவர் தெரிவித்தார்.