தவெகவில் இணைவதற்கு யாருடைய நிர்பந்தமும் இல்லை என்றும், இது தனது சொந்த விருப்பத்தின் பேரிலேயே எடுக்கப்பட்ட முடிவு என்றும் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் திட்டவட்டமாக விளக்கம் அளித்துள்ளார்.
கரூர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'தவெகவில் சேர எனக்கு அக்கட்சியில் இருந்தோ அல்லது அதிமுகவில் இருந்து தவெகவுக்கு சென்றவர்களிடம் இருந்தோ யாரும் அழைப்பு விடுக்கவில்லை. தவெகவுக்கு சென்ற முன்னாள் அமைச்சர்களான உடுமலை ராதாகிருஷ்ணன், எம்.சி.சம்பத், கடம்பூர் ராஜு, சிவபதி போன்றோரிடம், கட்சிக்கு சென்ற பிறகு அங்குள்ள சூழல் எப்படி இருக்கிறது என்று கேட்டறிந்தேன். அதைத்தான் நான் பேட்டியில் குறிப்பிட்டிருந்தேன். ஆனால், நிர்வாகிகளின் கருத்தைக் கேட்டு எடுக்கப்பட்ட இந்த விஷயத்தை பத்திரிக்கைகளும் தொலைக்காட்சிகளும் தவறாக வெளியிட்டுவிட்டன. இது முற்றிலும் எனது சுயமான முடிவு. நிர்வாகிகளின் கருத்துக்களைக் கேட்டறிந்த பிறகு, எந்தவிதமான அழுத்தமும் இன்றி, பல கட்ட யோசனைகளுக்குப் பிறகு நான் தவெகவில் இணைந்தேன். இது முழுமையாக எனது சொந்த முடிவு' என்று அவர் கூறினார்.
மேலும், 'தவெகவுக்குச் செல்ல வேண்டும் என்ற எண்ணம் அதிமுக நிர்வாகிகளிடம் இருந்தது. அதனால்தான் இன்று ஒன்றிய, நகர, பகுதி செயலாளர்கள் என்னுடன் வந்து தவெகவில் இணைந்துள்ளனர். எனது சுய விருப்பத்தின் பேரில்தான் நான் தவெகவில் இணைந்தேன். தவெக அல்லது தவெகவில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களின் நிர்பந்தத்தால் நான் தவெகவில் இணையவில்லை' என்றும் அவர் வலியுறுத்தினார்.
இனாம் நிலப் பிரச்சனைக்கு, பொதுமக்கள் பாதிக்கப்படாத வகையில் ஒரு சிறப்பு குழுவை அமைத்து நிரந்தர தீர்வு காண வேண்டும் என்றும் முதலமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
