கரூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் 27 அன்று நடந்த துயரச் சம்பவத்தின் போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு துணை நின்று உதவியது யார் என்ற கேள்வியை எழுப்பி, தி.மு.க. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சமூக வலைதளத்தில் ஒரு கிண்டல் பதிவை வெளியிட்டுள்ளார்.
தனது பதிவில், 'எனது உயிரில் கலந்த கரூர் மக்களுக்காக களத்தில் துணை நின்று காப்பாற்றியது யார்? எனது கரூர் சொந்தங்களுக்காக இரவு பகல் பாராமல் முன் நின்று உதவியது யார்?' என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், செய்தி கிடைத்த உடனேயே கரூருக்கு விரைந்து வந்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி, உடனடி உயர்சிகிச்சை கிடைக்க அனைத்துத் தேவையான ஏற்பாடுகளையும் செய்து, அவர்களின் உயிரைக் காத்து, துயரைத் துடைத்தவர்கள் அன்றைய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகிய இருவர் தான் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு பதிலடியாக, அன்றைய கூட்டத்தில், பெருமளவில் மக்கள் மயங்கி விழுந்த அசாதாரண சூழ்நிலையிலும், தண்ணீர் பாட்டிலை வீசிவிட்டு, ஆம்புலன்ஸை வரச் சொல்லிவிட்டு, மக்களைக் காப்பாற்றாமல், தனது பேச்சை தொடர்ந்து பேசியது யார் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், திருச்சி விமான நிலையத்தில் பத்திரிகையாளர்கள் அத்தனை பேர் இறந்துள்ளதாகக் கூறியும், பாதிக்கப்பட்ட மக்களைப் பார்க்காமல், தனி விமானம் பிடித்து ஓடியது யார் என்பது தனது கரூர் மக்களுக்கு நன்றாகத் தெரியும் என்றும் அவர் கூறியுள்ளார்.
'ஓடு. ஓடு.. ஓடு…' என்று செந்தில் பாலாஜியும் பதிலுக்கு கிண்டல் அடித்துள்ளார். இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
