சென்னை விம்கோ நகரில் நடைபெற்ற திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலக திறப்பு விழாவில், தூய்மைப் பணியாளர்களை வெறும் கைகளால் காலணிகளை அப்புறப்படுத்த வைத்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தவெக அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் கலந்துகொண்ட இந்த நிகழ்வில், கட்சி நிர்வாகிகள் தூய்மைப் பணியாளர்களை இழிவாக நடத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
நிகழ்ச்சிக்கு வந்த தவெகவினர் ஆங்காங்கே காலணிகளைக் கழற்றிப் போட்ட நிலையில், அமைச்சர் வருவதால் அவற்றை அப்புறப்படுத்தும்படி தூய்மைப் பணியாளர்களை நிர்வாகிகள் கேட்டுக்கொண்டதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து, தூய்மைப் பணியாளர்கள் வெறும் கைகளால் காலணிகளை அப்புறப்படுத்திய காணொலி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் செயலுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ள பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், 'சமூகத்தின் தூய்மைக்காகப் பாடுபடும் எளிய மனிதர்களை இத்தகைய இழிவான முறையில் நடத்தியிருப்பது, அவர்களின் கண்ணியத்தை முற்றிலும் சிதைக்கும் மனிதநேயமற்ற செயல்' என விமர்சித்துள்ளார். மேலும், 'மேடைகளில் சமத்துவம், சமூகநீதி மற்றும் தொழிலாளர் நலன் குறித்துப் பேசும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் திரு. ஜோசப் விஜய் அவர்கள், தன் கட்சியின் பின்னணியில் நிகழ்ந்துள்ள இந்த அநீதிக்கு என்ன பதில் சொல்லப் போகிறார்?' என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
எளிய மக்களின் உழைப்பையும் சுயமரியாதையையும் மதிக்காத தவெகவினரின் செயல், அவர்கள் பேசும் கொள்கைகள் அனைத்தும் வெறும் வெற்று முழக்கங்கள் தான் என்பதைக் காட்டுவதாகவும் நயினார் நாகேந்திரன் குறிப்பிட்டுள்ளார். இந்த அவலச் சம்பவத்திற்குத் தார்மீகப் பொறுப்பேற்று தவெக தலைவர் திரு. விஜய் உடனடியாக மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும், கட்சி நிர்வாகிகள் மத்தியில் மனிதநேயத்தையும் ஒழுக்கத்தையும் வளர்க்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.