கல்விக்கூடங்கள் வெறும் விழாக்களின் கூடாரங்கள் அல்ல, அவை அடுத்த தலைமுறையை உருவாக்கும் அறிவுப் பண்ணைகள் என அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார். அரசுப் பள்ளிகளில் இனிவரும் காலங்களில் தேவையின்றி யாரும் நுழைய அனுமதி இல்லை என்றும், அரசு சார்பில் நடத்தப்படும் அதிகாரப்பூர்வ நிகழ்வுகளைத் தவிர்த்து, பிறந்தநாள் விழாக்கள் அல்லது அரசு சாரா நிகழ்வுகள் நடத்தக் கூடாது என்றும் அவர் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கல்விக்கூடங்கள் காட்சிக்கூடங்கள் அல்ல, அரசியலின் மேடை அல்ல. அவை அடுத்த தலைமுறைகளை உருவாக்கும் அறிவுப் பண்ணையாகும். மாணவச் செல்வங்கள் வகுப்பறையில் அமர்ந்து கற்கும் ஒவ்வொரு நொடியும், அவர்களின் வாழ்க்கையை மட்டுமல்ல, இந்த நாட்டின் வருங்காலத்தை வடிவமைக்கும் பொன்னான நேரமாகக் கருதப்படுகிறது. அந்த நேரம் வெறும் பாட நேரமல்ல; கனவுகள் விதைக்கப்படும் நேரம், சிந்தனைகள் செழுமையாக்கும் நேரம், அறிவு பெருகும் நேரம், வருங்காலத் தமிழகம் தன் எண்ணங்களை வண்ணமயமாக செதுக்கும் நேரம்," என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், "வகுப்பு நடைபெறும் நேரத்தில் எந்தக் காரணத்திற்காகவும் யாரும் பள்ளிக்குள் நுழைவதோ, மாணவ, மாணவியரை நேரடியாகச் சந்திப்பதோ முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும். மாணவர்களின் கவனமும், ஆசிரியர்களின் கற்பித்தல் பணியும் எவ்வித இடையூறுமின்றித் தொடர்வதே நம் முதன்மைப் பொறுப்பு. பள்ளி வளாகங்கள் விழாக்களின் கூடாரமாக அல்ல, அறிவுத் தெளிவின் விழிப்புணர்வின் சிந்தனை மண்டபமாக மிளிர வேண்டும். புகழ் பரப்பும் இடமாக அல்ல, எதிர்காலத்தைப் படைக்கும் இடமாகத் திகழ வேண்டும்," என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
எந்த அரசியல் கட்சியினரும், எந்தத் தனியார் அமைப்பினரும் நேரடியாக மாணவர்களைச் சந்திக்க அனுமதியில்லை என்றும் அவர் தனது அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளார். மாணவர்களின் எண்ணங்களைத் துளிர்விட்டு, கனவுகளுக்கு இறக்கை கட்டி, எண்ணுவதையெல்லாம் நனவாக்கும் ஆற்றலைப் பெறும் அரசுப் பள்ளி மாணவ, மாணவியர் இன்னும் இன்னும் உயரப் பறக்க வேண்டும் என்றும், அறிவிலும், பண்பிலும், சாதனைகளிலும் உலகம் வியக்கும் உயரங்களை எட்ட வேண்டும் என்றும் அவர் வாழ்த்தியுள்ளார்.
அரசுப் பள்ளிகளில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளுக்கும் உரிய ஒழுங்கு, பாதுகாப்பு மற்றும் கல்விச் சூழலை உறுதிசெய்யும் வகையில் விரிவான நெறிமுறைகள் பள்ளிக் கல்வித்துறை சார்பில் விரைவில் வெளியிடப்படும் என்றும் அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார். "அன்பு மாணவச் செல்வங்களே… நல்லதைப் படியுங்கள்! நன்றாகப் படியுங்கள்!" என்று அவர் தனது அறிக்கையை நிறைவு செய்துள்ளார்.
இந்த புதிய நெறிமுறைகள் மூலம், பள்ளி வளாகங்கள் கல்வி கற்பதற்கும், அறிவு வளர்ச்சிக்கும் உகந்த சூழலாக மாற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாணவர்களின் கல்விக்கு முக்கியத்துவம் அளித்து, தேவையற்ற இடையூறுகளைக் குறைக்கும் இந்த நடவடிக்கை கல்வித்துறையில் ஒரு முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது. அனைத்து அரசுப் பள்ளிகளிலும் இந்த அறிவிப்பு உடனடியாக அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
