தமிழகத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகள் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களாக தரம் உயர்த்தப்பட்டதன் காரணமாக, அரசு ஒதுக்கீட்டில் இருந்த 600 எம்பிபிஎஸ் இடங்கள் பறிபோனதாக அமைச்சர் அருண்ராஜ் குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'திமுக அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி கொடுக்காமல், வழங்கிய என்.ஓ.சி-யை ரத்து செய்ததால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது' என்று தெரிவித்தார்.
தனியார் மருத்துவக் கல்லூரிகள் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களாக மாறும்போது, அவை இட ஒதுக்கீட்டு விதிகளைப் பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லை என்றும், இதன் மூலம் தமிழக அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கான 7.5% இட ஒதுக்கீடும் பாதிக்கப்படுகிறது என்றும் அமைச்சர் விளக்கினார். தமிழ்நாட்டில் நான்கு தனியார் மருத்துவக் கல்லூரிகள் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களாக மாறியதால் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களாக தரம் உயர்த்த அனுமதி கோரி தனியார் மருத்துவக் கல்லூரிகள் தமிழக அரசை அணுகியபோது, அவற்றின் விண்ணப்பங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க தாமதம் ஏற்பட்டதாக அமைச்சர் அருண்ராஜ் கூறினார். தாமதமாக என்.ஓ.சி-யை மறுத்த காரணத்தால், சில தனியார் மருத்துவக் கல்லூரிகள் உயர் நீதிமன்றத்தை நாடி அனுமதி பெற்றன. அந்த கல்லூரிகள் தொடர்ந்த வழக்குகளில், முந்தைய திமுக அரசு எந்த மேல்முறையீடும் செய்யவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
தொடர்ந்து 60 நாட்கள் வரை தமிழக அரசு மேல்முறையீடு செய்யாததால், ஒரு கல்லூரிக்கு நிகர்நிலைப் பல்கலைக்கழக அந்தஸ்து கிடைத்துள்ளது. இதேபோல், மற்றொரு கல்லூரிக்கு திமுக ஆட்சியில் 60 நாட்கள் வரை தடையில்லா சான்றிதழ் வழங்கப்படவில்லை. இதன் காரணமாக அந்த மருத்துவக் கல்லூரிக்கும் நிகர்நிலைப் பல்கலைக்கழக அந்தஸ்து கிடைத்ததாக அமைச்சர் தெரிவித்தார்.
மாநில அரசின் ஒப்புதல் இல்லாமலேயே நான்கு மருத்துவக் கல்லூரிகள் நிகர்நிலைப் பல்கலைக்கழக அந்தஸ்தைப் பெற்றுள்ளன. தமிழக அரசு என்.ஓ.சி. வழங்காததால், சில கல்லூரிகள் நீதிமன்றத்தின் மூலம் அனுமதி பெற்றன. குறிப்பாக, பெரம்பலூரில் உள்ள இரண்டு கல்லூரிகள் அரசின் ஒப்புதல் இன்றியே நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களாக மாறியுள்ளன.
நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களாக அறிவிக்கப்படும் கல்லூரிகள், இட ஒதுக்கீட்டைப் பின்பற்றாமல் மாணவர் சேர்க்கையை நடத்த முடியும். மேலும், தமிழக அரசு நிர்ணயிக்கும் கட்டணத்தை வசூலிக்கவும் அவற்றுக்குக் கட்டாயம் இல்லை. தனியார் மருத்துவக் கல்லூரிகள் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களாக அறிவிக்கப்பட்டதற்கு எதிராக நீதிமன்றத்தை அணுகுவோம் என்றும், நீதிமன்றத்தில் தடை பெறாவிட்டால் இட ஒதுக்கீடு பாதிக்கப்படும் சூழல் உருவாகி இருப்பதாகவும் அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்தார்.
தமிழக அரசின் ஒப்புதல் இல்லாமல் தமிழ்நாட்டு கல்லூரிகள் எப்படி நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களாக மாற்றப்படலாம் என்ற கேள்வியையும் அவர் எழுப்பினார். நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களாக மாற்றப்பட்டுள்ள நான்கு தனியார் மருத்துவக் கல்லூரிகள் எந்தக் கட்சியைச் சேர்ந்தவை என்பது அனைவருக்கும் தெரியும் என்றும், சமூக நீதியைப் பற்றிப் பேசும் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் நடத்தும் கல்லூரிகள்தான் இட ஒதுக்கீட்டிற்கு எதிராகச் செயல்படுகின்றன என்றும் அவர் விமர்சித்தார். சமூக நீதியைப் பற்றிப் பேசும் திமுக மற்றும் அதிமுக கட்சிகள் இதற்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
