கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக அடைந்த தோல்வி குறித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கட்சி நிர்வாகிகளுடன் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் மனம் திறந்து பேசியுள்ளார். ஏற்கனவே ஐந்து ஆண்டுகள் எதிர்க்கட்சியாக இருந்த நிலையில், தற்போது எதிர்க்கட்சி அந்தஸ்தையும் திமுகவிடம் இழந்துள்ளது அதிமுக. இந்தத் தோல்விக்கு முக்கியக் காரணம், தமிழக வெற்றிக்கழகத்துடன் (தவெக) கூட்டணி அமைக்காததுதான் என கட்சி நிர்வாகிகள் மத்தியில் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
மேலும், திமுகவுடன் இணைந்து ஆட்சியமைக்க எடப்பாடி பழனிசாமி முயற்சிப்பதாகக் கூறி, அதிமுகவில் இருந்து முன்னணி நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகி வருகின்றனர். குறிப்பாக, அதிமுகவில் தேர்வான ஆறு சட்டமன்ற உறுப்பினர்கள் தற்போதைய சூழலில் ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க.வில் இணைந்துள்ளனர். இதுமட்டுமின்றி, பல முன்னாள் அமைச்சர்களும் அதிமுகவில் இருந்து விலகிச் சென்றுள்ளனர். இந்த தொடர் நிகழ்வுகளால் அதிமுகவின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.
இந்தச் சூழ்நிலையில், அதிமுகவின் எதிர்காலத்தை வலுப்படுத்தும் நோக்கில், அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மாவட்டம் வாரியாக கட்சி நிர்வாகிகளுடன் தொடர் ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி வருகிறார். சமீபத்தில், செங்கல்பட்டு கிழக்கு மற்றும் மேற்கு மாவட்டங்கள், மற்றும் வேலூர் மாவட்ட நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை மேற்கொண்டார்.
ஆலோசனைக் கூட்டத்தின்போது கட்சி நிர்வாகிகளிடம் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், 'கட்சியில் பதவி சுகங்களையும், ஆட்சி அதிகாரங்களையும் அனுபவித்தவர்கள் தான் தற்போது விலகிச் சென்றுள்ளார்கள். ஆனால், கட்சியின் அடிமட்டத் தொண்டர்கள் அனைவரும் அதிமுகவில்தான் இருக்கிறார்கள். எனவே, நீங்கள் அனைவரும் மிகுந்த உற்சாகத்துடன் கட்சிப் பணிகளில் ஈடுபட வேண்டும். வரும் இடைத்தேர்தல்களில் அதிமுக வேட்பாளரின் வெற்றிக்காகக் கடுமையாக உழைக்க வேண்டும். வருகிற உள்ளாட்சித் தேர்தலில் அனைவருக்கும் உரிய வாய்ப்புகள் வழங்கப்படும்' எனத் தெரிவித்தார்.
மேலும் அவர், 'சட்டமன்றத் தேர்தலில் அதிமுக மற்றும் திமுக இடையேதான் முக்கியப் போட்டி நிலவும் என்று நாங்கள் நினைத்திருந்தோம். ஆனால், தமிழக வெற்றிக்கழகத்தை (தவெக) கணிப்பதில் நாங்கள் தவறிவிட்டோம். அதன் விளைவாகவே இன்று அவர்கள் ஆட்சியில் இருக்கிறார்கள். சினிமா மோகத்தில் இளைஞர்களும், குழந்தைகளும், தங்களது பெற்றோரை வலியுறுத்தி எங்களுக்கு எதிராக வாக்களிக்க வைத்துவிட்டார்கள். இது போன்ற சூழலில், மாவட்டந்தோறும் இளைஞர், இளம்பெண்கள் பாசறையைச் சீர்படுத்த வேண்டிய தேவை உள்ளது' என்றும் குறிப்பிட்டார்.
'அதேபோல, அதிமுக ஆட்சியின்போது மக்களுக்கு வழங்கப்பட்ட திட்டங்களை இளைஞர்களிடமும், பொதுமக்களிடமும் கொண்டுபோய் சேர்க்க வேண்டிய கடமை நமக்கு உள்ளது. இந்தத் திட்டங்களின் நன்மைகளை எடுத்துரைப்பதன் மூலம், மக்களை நாம் மீண்டும் சென்றடைய முடியும்' என்று எடப்பாடி பழனிசாமி தனது உரையில் வலியுறுத்தினார். கட்சி நிர்வாகிகள் அனைவரும் உற்சாகத்துடன் செயல்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
