முதியோர்களுக்கான 'தாயுமானவர் திட்டம்' குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இத்திட்டம் நிறுத்தப்படாது என்றும், விரைவில் விரிவுபடுத்தப்படும் என்றும் உணவுத்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும், இத்திட்டத்தின் கீழ் பயன்பெறுவதற்கான வயது வரம்பை 65-லிருந்து 60 ஆகக் குறைக்க அரசு அதிரடி முடிவு எடுத்துள்ளது.
முதல்-அமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ், 65 வயதிற்கு மேற்பட்ட முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இல்லங்களுக்கே நேரடியாகச் சென்று பொது விநியோகத் திட்டப் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. சமூகத்தில் மிகவும் நலிவடைந்த பிரிவினரான வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் துயர் துடைக்கும் நோக்கில் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. தகுதிவாய்ந்த குடும்ப அட்டைதாரர்களின் இல்லங்களுக்கு நேரடியாகச் சென்று அரிசி, சர்க்கரை மற்றும் இதர அத்தியாவசியப் பொருட்களை ரேஷன் கடை ஊழியர்கள் விநியோகம் செய்து வருகின்றனர்.
ரேஷன் பொருட்களை வாங்க நியாயவிலைக் கடைகளுக்கு நேரில் வந்து நீண்ட வரிசையில் காத்திருக்கும் சிரமங்களை முழுமையாகக் களையும் பொருட்டு இந்த உன்னதமான திட்டம் அரசால் நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்நிலையில், இச்சேவை நிறுத்தப்பட வாய்ப்புள்ளதாகப் பரவிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், நடப்பாண்டில் இத்திட்டத்தை மேலும் வலுப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வயது வரம்பு 60 ஆகக் குறைக்கப்பட்டதன் மூலம், தமிழ்நாட்டில் உள்ள மேலும் பல லட்சக்கணக்கான முதியவர்கள் இனி தங்களது இல்லங்களிலேயே தடையின்றி ரேஷன் பொருட்களைப் பெற்றுக்கொள்ள முடியும். இது முதியவர்களுக்கு ஒரு இரட்டை ஜாக்பாட் என கருதப்படுகிறது.