தவெக ஆட்சியை கவிழ்க்க முயற்சிக்கும் நோக்கில், எம்.எல்.ஏ. இளையராஜாவிடம் ரூ.35 கோடி பேரம் பேசிய விவகாரத்தில், திமுக முன்னாள் அமைச்சர் வி.செந்தில்பாலாஜியின் சகோதரர் வி.அசோக்குமார் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை தொகுதி தவெக எம்.எல்.ஏ. டாக்டர் என்.இளையராஜாவிடம், சென்னையைச் சேர்ந்த திருநாவுக்கரசு என்பவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, தான் ஒரு கருத்துக் கணிப்பு நிறுவனத்தை நடத்தி வருவதாகவும், முக்கிய அரசியல் கட்சியினர் சார்பில் பேசுவதாகவும் கூறி நேரில் சந்திக்க விருப்பம் தெரிவித்துள்ளார். பின்னர், சட்டப்பேரவையில் சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர இருப்பதாகவும், அதில் தங்களுக்கு சாதகமாக வாக்களிக்க வேண்டும் என்றும், அதற்கு ஈடாக ரூ.35 கோடி வரை பணம் தருவதாகவும் ஆசை வார்த்தை காட்டியுள்ளார். எம்.எல்.ஏ. இளையராஜா மறுப்பு தெரிவித்தபோது, இதுகுறித்து வெளியே கூறினால் உயிருக்கு ஆபத்து என மிரட்டல் விடுத்துள்ளார்.
இதுகுறித்து எம்.எல்.ஏ. இளையராஜா கடந்த மாதம் 29-ம் தேதி சென்னை காவல் ஆணையர் அமல்ராஜிடம் புகார் அளித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில், திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். செல்போன் அழைப்பு விவரங்கள், தொழில்நுட்ப ஆதாரங்களை சேகரித்து, சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த திருநாவுக்கரசு, திருச்சியைச் சேர்ந்த நரேஷ், சென்னை மேடவாக்கத்தைச் சேர்ந்த தியாகராஜன் மற்றும் கிருஷ்ணன் ஆகியோரை கைது செய்தனர். மேலும், இந்த சதியில் திமுக முன்னாள் அமைச்சரும், கோயம்புத்தூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான வி.செந்தில்பாலாஜியின் சகோதரர் வி.அசோக்குமாருக்கும் தொடர்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
கைது செய்யப்பட்ட 4 பேரும் உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள சென்னை முதன்மை அமர்வு நீதிபதி எஸ்.கார்த்திகேயன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி, 3 பேரை ஜூலை 15-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். கைதான நரேசை, செந்தில்பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் நேரடியாக சந்தித்து பேசியதாகவும், அவர்கள் அறிவுறுத்தலின் பேரிலேயே எம்.எல்.ஏ. இளையராஜாவிடம் பேசியதாகவும் கைதானவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த வழக்கில் மேலும் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவாகியுள்ள அசோக்கை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.