மும்பை: ஐபிஎல் 2026 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங் வரிசையை கேள்விக்குள்ளாக்கியுள்ளார். அனுபவமற்ற இளம் வீரர் கார்த்திக் ஷர்மாவை, அனுபவம் வாய்ந்த டெவால்ட் பிரெவிஸ் மற்றும் சிவம் தூபேவுக்கு முன்னதாக களமிறக்கும் முடிவை அவர் விமர்சித்தார்.
2026 ஏலத்தில் சிஎஸ்கே கார்த்திக்கை ₹14.20 கோடிக்கு வாங்கியது. சீசன் தொடக்கத்தில் கீழ் நடுவரிசையில் ஆடியவர், கடந்த இரு போட்டிகளிலும் நான்காவது இடத்தில் பேட் செய்து வருகிறார். இந்த மாற்றம் பலனளித்து, அவர் தனது கடைசி இரண்டு இன்னிங்ஸ்களில் 54* மற்றும் 41* ரன்கள் எடுத்து, இலக்குகளை எட்ட அணிக்கு உதவினார்.
எனினும், இந்த வெற்றி தற்காலிகமானது என்றும், பெரிய போட்டிகளில் இது பின்னடைவை ஏற்படுத்தலாம் என்றும் பத்ரிநாத் தனது யூடியூப் சேனலில் எச்சரித்தார். “நான்காவது இடத்தில் கார்த்திக் ஷர்மாவை களமிறக்குவதில் சிஎஸ்கே பிடிவாதமாக உள்ளது. அவர் நன்றாக விளையாடினாலும், கோப்பைகளை வென்ற அனுபவம் உள்ளவர்கள் இருக்கும்போது, அவர்களை ஏன் முன்னிலைப் படுத்துவதில்லை? 150 போன்ற குறைந்த இலக்குகளை துரத்தும்போது இது இப்போது பலனளிக்கிறது” என்று அவர் கூறினார்.
அவர் தொடர்ந்து, “பிரெவிஸ் மற்றும் சிவம் துபே போன்றோருக்கு வாய்ப்பின்றி, 14 கோடிக்கு வாங்கிய இளம் வீரருக்கு சிஎஸ்கே ஆதரவு அளிக்கிறது. தற்போது பலனளித்தாலும், நீண்டகால அடிப்படையில் சிஎஸ்கேவுக்கு இது உதவுமா என்பது கேள்விக்குறி” என்றார். நான்காவது இடத்தில் கிடைத்த வெற்றியால், கார்த்திக் இந்த சீசனில் 153 ரன்களை (சராசரி 30+, ஸ்ட்ரைக் ரேட் 127.50) எடுத்தார்.
பத்ரிநாத் மேலும், சஞ்சு சாம்சன் , ருதுராஜ் கெய்க்வாட் தொடக்க ஜோடியை பிரிக்குமாறு சிஎஸ்கேவுக்கு வலியுறுத்தினார். முன்னாள் சிஎஸ்கே நட்சத்திர வீரரான அவர், இளம் அதிரடி வீரர் உர்வில் படேல் சாம்சனுடன் இணைந்து இன்னிங்ஸைத் தொடங்க வேண்டும் என்றும், ருதுராஜ் கெய்க்வாட் மூன்றாவது இடத்திற்கு இறங்க வேண்டும் என்றும் ஆலோசனை தெரிவித்தார்.
“சஞ்சுவும் ருதுராஜும் தொடக்க வீரர்களாக களமிறங்கக் கூடாது என்பதை நான் ஆரம்பத்திலிருந்தே கூறி வருகிறேன். கெய்க்வாட் மூன்றாவது இடத்திலும், உர்வில் படேல் தொடக்க வீரராகவும் இருக்க வேண்டும். உர்வில் அதிரடியாகவும் சுதந்திரமாக விளையாட அனுமதிக்கப்படலாம்; இது சஞ்சுவுக்கு ஓய்வு தரும். 3 மற்றும் 4வது இடங்கள் மிக முக்கியமானவை” என்று பத்ரிநாத் விளக்கினார்.
“சிஎஸ்கே கடந்த இரு போட்டிகளிலும் 150 ரன்களைத் துரத்தியுள்ளது. முதலில் பேட் செய்வது அல்லது 190-200 ரன்களை துரத்துவது வேறு. இத்தகைய சூழ்நிலைகளில் அல்லது பிளே ஆஃப்களில் நாக் அவுட் போட்டியை வெல்ல வேண்டியிருந்தால், இந்த பேட்டிங் வரிசை பலன் தருமா? எனக்கு நம்பிக்கை இல்லை” என்று கேள்வி எழுப்பினார்.
சஞ்சு சாம்சன் தனது முதல் சிஎஸ்கே சீசனில் தொடக்க ஆட்டக்காரராக சிறப்பாகச் செயல்பட்டு, 10 இன்னிங்ஸ்களில் 57.42 சராசரி மற்றும் 157.50 ஸ்டிரைக் ரேட்டில் ரன்கள் எடுத்துள்ளார். ஆனால், கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தொடக்க வீரராக தடுமாறி வருகிறார். அவரது சராசரி 31.37 ஆகவும், ஸ்ட்ரைக் ரேட் 121-க்கும் குறைவாகவும் இருப்பது ஏமாற்றமளிக்கிறது.