அதிமுகவில் இருந்து விலகி, தங்கள் ஆதரவாளர்களுடன் தவெகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், கிடப்பில் உள்ள காவிரி-வைகை-குண்டாறு திட்டத்தை தொடங்க வலியுறுத்தியுள்ளார். மேலும், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தர வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
கரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 200 பேருந்துகள், 600 கார்கள் மூலம் 15 ஆயிரம் நிர்வாகிகள் இந்த இணைப்பு விழாவில் பங்கேற்றனர். தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த், சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் முன்னாள் அமைச்சர்களுக்கு தவெக துண்டை அணிவித்து வரவேற்றார்.
இந்த இணைப்பு விழா, வெறும் டிரெய்லர் தான் என்றும், டெல்டா மாவட்டத்தில் தலைமையின் ஆதரவோடு மெயின் பிக்சரை காட்டுவோம் என்றும் சி.விஜயபாஸ்கர் பேசினார். எல்லா தேர்தல்களிலும் தவெக வெற்றி பெறும் என்றும், உறுதியான ஒற்றை தலைமையில் பயணித்து வெற்றி வாகை சூடுவோம் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். தேர்தலுக்கு முன் தவெக உடன் கூட்டணி வைக்க அதிமுக தலைமைக்கு வலியுறுத்தியும் கேட்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
அதிமுகவில் இருந்து விலகிய மற்றொரு முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், ஈபிஎஸ்-ன் தவறான முடிவுகளால் அதிமுக தள்ளாடுகிறது என்றும், உண்மையை சொன்னால் துரோகி என்கிறார்கள் என்றும் குற்றம் சாட்டினார். தமிழகத்தில் அரசியல் புரட்சி ஏற்பட்டுள்ளது என்றும், எம்ஜிஆர் போல இனி தமிழகத்தில் விஜய் ஆட்சி தான் தொடரும் என்றும் அவர் கூறினார். முதலமைச்சர் விஜய் ஓரிரு வாரங்களில் கரூர் வர இருப்பதாகவும், அப்போது மேலும் பல தொண்டர்கள் தவெகவில் இணைவார்கள் என்றும் அவர் தெரிவித்தார். 'மாபெரும் அரசியல் மாற்றத்தை உருவாக்கியவர் సీఎం விஜய். அரசியல் மாற்றம் என்பது ஒரு தலைமுறை மாற்றம்' என்றும் அவர் குறிப்பிட்டார்.