இந்திய அணியின் தொடக்க வீரர் சஞ்சு சாம்சன் தொடர்ந்து சொற்ப ரன்களில் ஆட்டமிழக்கும் ஒரு மோசமான கட்டத்தைக் கடந்து வருவதாக சபா கரீம் தெரிவித்துள்ளார். இருப்பினும், இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் சந்தித்த தோல்வியில் இருந்து மீண்டு, ஒரு சிறந்த ஆட்டத்தை சாம்சன் வெளிப்படுத்துவார் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
புதன்கிழமை டர்ஹாமில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட் செய்த இந்தியா 189/7 ரன்கள் எடுத்தபோது, சாம்சன் ஏழு பந்துகளில் ஒரே ஒரு ரன் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். எனினும், மழை குறுக்கிட்டதால் இங்கிலாந்து அணியால் தங்களது சேஸிங்கைத் தொடங்க முடியாமல் போனது, இதனால் ஆட்டம் முடிவின்றி நிறைவடைந்தது. இது குறித்து பேசிய சபா கரீம், சாம்சன் தனது கிரிக்கெட் வாழ்க்கையில் பலமுறை இதுபோன்ற மோசமான கட்டங்களை எதிர்கொண்டுள்ளார் என்றும், இந்த ஸ்டைலிஷ் பேட்ஸ்மேன் விரைவில் ரன்களை குவிப்பார் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். அவர் எதிர்கொண்ட ஏழாவது பந்திலேயே ஆட்டமிழந்தார். அதற்கு முன்பு அவர் விளையாடிய ஆறு பந்துகளில், ஒரு பெரிய ஷாட் வரப்போகிறது அல்லது விக்கெட் விழப்போகிறது என்பது போல இருந்தது.
சஞ்சுவின் கிரிக்கெட் பயணத்தில் இதுபோன்ற கட்டங்கள் வருவதுண்டு. அவரது விக்கெட் விழுந்தால், அது முதல் 10 பந்துகளுக்குள்ளேயே விழுந்துவிடும். ஒருவேளை அவர் அதிலிருந்து தப்பித்துவிட்டால், பெரிய இன்னிங்ஸை விளையாடுவார். இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் வீசிய லென்த் சஞ்சுவை கட்டிப்போட்டது. ஷாட்களை விளையாடுவதற்கான எலிவேஷன் அல்லது ரூம் அவருக்கு கிடைக்கவில்லை என்று முன்னாள் இந்திய விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் கூறினார். வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக இன்ஃபீல்டிற்கு மேலே பந்தை அடிப்பது அவரது முக்கிய ஷாட் ஆகும். இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர்கள் அதைத் தடுத்தனர், இதனால் சஞ்சுவுக்கு சற்றே அழுத்தம் அதிகரித்தது. சஞ்சு சாம்சனின் விளையாட்டு வாழ்க்கையில் இத்தகைய சூழ்நிலை பலமுறை ஏற்பட்டுள்ளது. இருப்பினும், அவர் இதிலிருந்து மீண்டு வந்து நிச்சயமாக ஒரு பெரிய இன்னிங்ஸை விளையாடுவார் என்று நான் எதிர்பார்க்கிறேன், என்று கூறினார்.
அதே விவாதத்தில் பங்கேற்ற முன்னாள் இந்திய ஆல்-ரவுண்டர் இர்ஃபான் பதான், சஞ்சு சாம்சனின் பேட்டிங் தொழில்நுட்பமே அவர் ஆட்டமிழக்கக் காரணமாக அமைந்தது என்று குறிப்பிட்டார். 'நீங்கள் சஞ்சு சாம்சனை அவுட் செய்ய பந்தை வெளியில் கொண்டு செல்ல வேண்டும். பந்தை வெளியில் கொண்டு செல்லாவிட்டாலும், ஆஃப்-ஸ்டம்பிற்கு வெளியில் பந்தை வீச வேண்டும். ஏனெனில் அவரது பேட் closed bat face ஆக இருக்கும். அவரது பேட் மூடிய நிலையில் இருக்கும்போது அவர் ஆஃப்-சைடில் விளையாட முயற்சித்தால், சில நேரங்களில் பேட்டின் முகம் திறந்துகொள்கிறது' என்று அவர் கூறினார். இதன் காரணமாகவே அவர் ஸ்லிப், கீப்பரிடம் கேட்ச் மற்றும் பிஹைண்ட் ஸ்கொயர் போன்ற திசைகளில் பலமுறை ஆட்டமிழப்பதை நாம் பார்த்திருக்கிறோம். அந்த குறிப்பிட்ட திட்டத்தின் மூலமே அவரை அவுட் செய்ய அவர்கள் நினைத்தனர். அதற்கேற்ப ஃபீல்டிங் மாற்றப்பட்டது, பந்துவீச்சாளரும் அதே லைனில் பந்து வீசினார், பந்து சற்று நின்று வந்த ஷார்ட் லென்த் வீசப்பட்டதால், சஞ்சுவிடம் இருந்து விக்கெட் பறிபோனது, என்று இர்பான் பதான் விரிவாக விளக்கினார். சஞ்சு சாம்சன் தனது கடைசி மூன்று டி20 இன்னிங்ஸ்களில் சேர்த்து மொத்தம் ஆறு ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். சமீபத்தில் நிறைவடைந்த இரண்டு போட்டிகள் கொண்ட அயர்லாந்து தொடரின் முதல் டி20 போட்டியில் 5 ரன்கள் எடுத்த அவர், இரண்டாவது போட்டியில் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். சஞ்சு சாம்சன் ஆட்டமிழந்ததைத் தொடர்ந்து இஷான் கிஷனும் ரன் அவுட் ஆனதால் இந்திய அணி 6 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இருப்பினும், அபிஷேக் சர்மா (24 பந்துகளில் 59 ரன்கள்), ஸ்ரேயாஸ் ஐயர் (47 பந்துகளில் 68 ரன்கள்) மற்றும் சிவம் துபே (21 பந்துகளில் 42* ரன்கள்) ஆகியோரின் அதிரடி ஆட்டம் இந்திய அணி ஒரு கவுரவமான இலக்கை எட்ட உதவியது.