இந்திய அணியில் அறிமுகமாக உள்ள இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, சர்வதேச கிரிக்கெட்டில் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக தனது சிறுவயது வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும் என தென்னாப்பிரிக்காவின் முன்னாள் வீரர் டேரில் கலினன் அறிவுறுத்தியுள்ளார். 70 டெஸ்ட் மற்றும் 138 ஒருநாள் போட்டிகளில் தென்னாப்பிரிக்காவுக்காக விளையாடியுள்ள கலினன், கிரிக்இன்போ இணையதளத்தில் எழுதிய கட்டுரையில் சூர்யவன்ஷி குறித்து தனது கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார்.
சூர்யவன்ஷியிடம் காணப்படும் திறமை அபாரமானது என்றும், ஆனால் இந்திய கிரிக்கெட் மற்றும் ஐபிஎல் போன்ற வணிக ரீதியான, சமூக ஊடகங்கள் நிறைந்த உலகில் 15 வயது சிறுவன் ஒருவன் நிறுத்தப்பட்டுள்ளான். இது போன்ற சூழலை கிரிக்கெட் உலகம் இதற்கு முன் கையாண்டதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சமூக ஊடகங்கள் இன்று ஒரு சிறுவனுக்கும், நூறு கோடி மக்களின் கருத்துக்களுக்கும் இடையிலான இடைவெளியைக் குறைத்துவிட்டன. இந்த வயதில் அவரது ஒவ்வொரு அசைவும் உற்றுநோக்கப்பட்டு விமர்சிக்கப்படும். எனவே, அவர் வீட்டில் இருந்துகொண்டு பரீட்சைக்குத் தயாராக வேண்டும்; நண்பர்களுடன் தெருவில் கிரிக்கெட் விளையாடி தனது சிறுவயதுப் பருவத்தை அனுபவிக்க வேண்டும். சச்சின் டெண்டுல்கர் இளம் வயதில் சர்வதேச கிரிக்கெட்டிற்கு வந்தபோது, அவரைப் பொறுப்பான நபர்கள் வழிநடத்தினர். ஆனால் இன்று அந்த நிலை இல்லை என கலினன் கவலை தெரிவித்துள்ளார்.
இளம் வயதில் அதிக கவனம் பெற்ற பல வீரர்களின் வாழ்க்கை திசைமாறிப் போனதைச் சுட்டிக்காட்டிய கலினன், சூர்யவன்ஷி தனது எதிர்காலத்திற்காக சச்சின் டெண்டுல்கரைத் தொடர்பு கொண்டு வழிகாட்டுதலைப் பெற வேண்டும் என்றும், சச்சினை விடச் சிறந்த வழிகாட்டி கிடைக்க மாட்டார் என்றும் குறிப்பிட்டுள்ளார். தற்போது இந்திய அணியுடன் இங்கிலாந்தில் இருக்கும் வைபவ் சூர்யவன்ஷி, அறிமுக வாய்ப்புக்காகக் காத்திருக்கும் சூழலில், கலினனின் இந்த அறிவுரை கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.