கோவை வழுக்கம்பாறையில், வீடு புகுந்து கல்லூரி மாணவியின் தந்தை மீது இளைஞர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிவக்குமார் என்பவரின் மகளின் அடையாள அட்டையை பறித்து சிலர் தாக்கியதாக கூறப்படுகிறது. இதை தட்டிக் கேட்ட சிவக்குமாரின் வீட்டிற்குள் புகுந்து இளைஞர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
சம்பவம் குறித்து நடத்தப்பட்ட விசாரணையில், சூர்யா என்ற இளைஞர் தனது நண்பர்களுடன் சேர்ந்து மாணவியின் வீட்டிற்குள் நுழைந்து சூறையாடியது தெரியவந்துள்ளது. சிவக்குமாரின் வீட்டிற்குள் புகுந்து தாக்குதல் நடத்தியதோடு மட்டுமல்லாமல், கொலை மிரட்டலும் விடுத்ததாக புகார் எழுந்துள்ளது. மேலும், தாக்குதல் நடத்திய இளைஞர்கள் வீட்டில் இருந்த சுமார் ரூ.1.5 லட்சம் பணம் மற்றும் நகைகளையும் திருடிச் சென்றதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை போலீஸார் வழக்குப் பதிவு செய்யவில்லை என பாதிக்கப்பட்ட சிவக்குமார் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக புகார் அளிக்க போத்தனூர் மகளிர் காவல் நிலையத்திற்கு சென்றபோது, நீண்ட நேரம் காத்திருக்க வைத்த பிறகு, மதுரைக்கரை காவல் நிலையம் செல்லுமாறு போலீஸார் கூறியதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காவல்துறையினர் உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு, தாக்குதல் நடத்திய இளைஞர்களை கைது செய்து, திருடப்பட்ட பணம் மற்றும் நகைகளை மீட்டுத்தர வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது. மேலும், காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றபோது அலட்சியமாக செயல்பட்ட அதிகாரிகள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.