டெல்லியில் புதிய பெட்ரோல் இருசக்கர வாகனங்கள் (பைக், ஸ்கூட்டர்) பதிவு செய்வதற்கு 2028 ஏப்ரல் 1 முதல் தடை விதிக்கப்படலாம் என புதிய கொள்கை வரைவு ஒன்று முன்மொழிந்துள்ளது. இந்த வரைவுப்படி, குறிப்பிட்ட தேதிக்குப் பிறகு டெல்லியில் எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் மட்டுமே பதிவு செய்யப்படும்.
இந்தத் தடை புதிய பதிவுகளுக்கு மட்டுமே பொருந்தும். ஏற்கனவே உள்ள பெட்ரோல் வாகனங்களை அவற்றின் பதிவுச் சான்றிதழ் காலம் முடியும் வரை தடையின்றி பயன்படுத்தலாம். இருப்பினும், 2028-க்குப் பிறகு பெட்ரோல் வாகனங்களின் மறுவிற்பனை மதிப்பு குறைய வாய்ப்புள்ளது. மேலும், 15 ஆண்டுகள் பழமையான பெட்ரோல் வாகனங்கள் மற்றும் 10 ஆண்டுகள் பழமையான டீசல் வாகனங்கள் ஸ்கிராப் செய்யப்பட வேண்டும் என்ற தற்போதைய ஆயுட்கால வாகன விதிமுறைகளும் இதனுடன் பொருந்தும்.
இது தற்போது வரைவு அறிக்கை மட்டுமே. போக்குவரத்துத் துறையின் பரிந்துரைகளை ஆராய்ந்த பிறகு, மக்களின் வசதி மற்றும் உள்கட்டமைப்பைக் கருத்தில் கொண்டு இறுதி அறிவிப்பில் காலக்கெடு மாற்றியமைக்கப்படலாம். எனவே, தற்போதைக்கு பெட்ரோல் வாகனம் வாங்குவது பாதுகாப்பானது என்றாலும், 2027-28 வாக்கில் வாகனம் வாங்கத் திட்டமிடுபவர்கள் எலக்ட்ரிக் வாகனங்களைத் தேர்ந்தெடுப்பதே எதிர்காலத்திற்குச் சிறந்ததாகும் என நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
மின்சார இருசக்கர வாகனங்கள் வாங்குவோருக்கு முதல் ஆண்டில் ₹30,000 வரை மானியம், பழைய வாகனங்களை மாற்றுவதற்கான சலுகைகள், வரி விலக்குகள் போன்ற பல ஊக்குவிப்புகள் வழங்கப்படுகின்றன. மின்சார மூன்று சக்கர வாகனங்கள், கார்கள், சரக்கு வாகனங்கள் மற்றும் பழைய வாகனங்களை ஸ்கிராப் செய்பவர்களுக்கும் பல்வேறு மானியங்களும் சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த கொள்கையின் முக்கிய நோக்கம், 2030-க்குள் டெல்லியின் வாகனப் புகையை தீவிரமாகக் குறைப்பதாகும்.