சுதந்திர தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வார இறுதி நாட்களான ஆகஸ்ட் 14, 15 (சுதந்திர தினம்) மற்றும் 16 ஆகிய தேதிகளில், பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்று திரும்ப வசதியாக இந்த சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக, சென்னை மற்றும் பிற முக்கிய நகரங்களில் இருந்து பல்வேறு பகுதிகளுக்குப் பயணிகளின் கூட்டம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும். சென்னையிலிருந்து கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு ஆகஸ்ட் 14 அன்று 505 பேருந்துகளும், ஆகஸ்ட் 15 அன்று 570 பேருந்துகளும் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு ஆகஸ்ட் 14 அன்று 110 பேருந்துகளும், ஆகஸ்ட் 15 அன்று 110 பேருந்துகளும் இயக்கப்படும். பெங்களூரு, திருப்பூர், ஈரோடு, கோயம்புத்தூர் ஆகிய நகரங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கு 200 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
மாதவரத்திலிருந்து ஆகஸ்ட் 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், வேலூர், ஓசூர் மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களுக்கு ஒவ்வொரு நாளும் 80 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும். ஞாயிற்றுக்கிழமையான ஆகஸ்ட் 16 அன்று, சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக, அனைத்து இடங்களிலிருந்தும் 465 சிறப்புப் பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த வார இறுதியில், ஆகஸ்ட் 14 அன்று 21,231 பயணிகளும், ஆகஸ்ட் 15 அன்று 43,69 பயணிகளும், ஆகஸ்ட் 16 அன்று 18,437 பயணிகளும் பயணம் செய்ய முன்பதிவு செய்துள்ளனர். இந்தப் பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
எனவே, தொலைதூரப் பயணம் மேற்கொள்ளவிருக்கும் பயணிகள், கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு, தங்களது பயணங்களுக்கு www.tnstc.in இணையதளம் அல்லது TNSTC மொபைல் செயலி மூலம் முன்பதிவு செய்து பயணிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். இந்தப் பேருந்து சேவைகளைக் கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதுமான அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, பயணிகள் இந்த சிறப்பு வசதியைப் பயன்படுத்தி தங்களது பயணத்தை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இந்த சிறப்பு பேருந்து இயக்கத்தின் மூலம் பொதுமக்கள் சிரமமின்றி தங்கள் பயணங்களை மேற்கொள்ள முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
