மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கு மாற்றாக, 'விக்சித் பாரத் – கிராம வேலை உறுதி மற்றும் வாழ்வாதாரத் திட்டம்' (Viksit Bharat – Guarantee for Rozgar and Ajeevika Mission (Gramin) – VB-G RAM G) என்ற புதிய திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய திட்டம் வரும் 2026 ஜூலை 1 முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் அமலுக்கு வரும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இந்த புதிய திட்டத்தின் முக்கிய நோக்கம், திறன்சாரா உடல் உழைப்புப் பணியை விருப்பத்துடன் மேற்கொள்ளும் கிராமப்புற குடும்பங்களின் வயது வந்த உறுப்பினர்களுக்கு, ஒவ்வொரு நிதியாண்டிலும் 125 நாட்கள் சட்டப்பூர்வ வேலைவாய்ப்பு உத்தரவாதம் வழங்குவதாகும். இத்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் பணிகள் நீர்வளப் பாதுகாப்பு, கிராமப்புற அடிப்படை உள்கட்டமைப்பு, வாழ்வாதாரம் தொடர்பான உள்கட்டமைப்பு, மற்றும் தீவிர வானிலை மற்றும் பேரிடர் பாதிப்புகளைத் தணிக்கும் சிறப்புப் பணிகள் என நான்கு பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.
பதிவு செய்யப்பட்ட குடும்பத்தின் வயது வந்த உறுப்பினர் வேலைக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் பெறப்பட்ட நாளிலிருந்து 15 நாட்களுக்குள் வேலை வழங்கப்பட வேண்டும். அவ்வாறு வழங்கப்படாவிட்டால், விண்ணப்பதாரருக்கு வேலைவாய்ப்பு உதவித்தொகை வழங்கப்படும். முதல் 30 நாட்களுக்கு அறிவிக்கப்பட்ட கூலியில் நான்கில் ஒரு பங்கும், மீதமுள்ள காலத்திற்கு பாதியும் வழங்கப்படும். வாரந்தோறும் அல்லது அதிகபட்சம் இரண்டு வாரங்களுக்குள் கூலி வழங்கப்பட வேண்டும். கூலி தாமதமானால், நாளொன்றுக்கு 0.05% இழப்பீடு வழங்கப்படும்.
வேலை ஒதுக்கீட்டில் பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்; குறைந்தபட்சம் மூன்றில் ஒரு பங்கு பெண்கள் பயனாளிகளாக இருக்க வேண்டும். வேலை, விண்ணப்பதாரர் வசிக்கும் கிராமத்திலிருந்து 5 கி.மீ. சுற்றளவுக்குள் வழங்கப்பட வேண்டும். அதற்கு வெளியே வழங்கப்பட்டால், போக்குவரத்து செலவிற்காக கூலியுடன் கூடுதலாக 10% வழங்கப்படும். தனித்து வாழும் பெண்கள், மாற்றுத்திறனாளிகள், 60 வயதுக்கு மேற்பட்டோர், விடுவிக்கப்பட்ட கொத்தடிமைகள், பழங்குடியினர் மற்றும் திருநங்கைகளுக்கு சிறப்பு வேலை உறுதி அட்டை வழங்கப்படும்.
பணியிடங்களில் தினசரி வருகை பதிவு பயோமெட்ரிக் முறையில் மேற்கொள்ளப்படும். அனைத்து பணிகளும் டிஜிட்டல் முறையில் பதிவு செய்யப்பட்டு, ஜியோ-டேக்கிங், மேலாண்மை தகவல் அமைப்பு (MIS), சமூகத் தணிக்கை போன்ற நடைமுறைகள் பின்பற்றப்படும். கிராம சபை மூலம் பணிகள் கண்காணிக்கப்பட்டு, சமூக தணிக்கை நடத்தப்படும். அனைத்து ஆவணங்களும் பொதுமக்கள் பார்வைக்குக் கிடைக்கச் செய்யப்பட வேண்டும். புகார் தீர்வு அமைப்பு செயல்படும், புகார்கள் 7 வேலை நாட்களுக்குள் விசாரிக்கப்பட்டு, 15 நாட்களுக்குள் தீர்வு வழங்கப்படும்.
இந்தத் திட்டம் மத்திய நிதியுதவி திட்டமாக செயல்படுத்தப்படும். இதில் மத்திய அரசு 60% நிதியையும், மாநில அரசு 40% நிதியையும் வழங்கும். வேலையில்லா உதவித்தொகை மற்றும் கூலி தாமத இழப்பீட்டிற்கான செலவை தமிழக அரசே ஏற்கும் என அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.