அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி கொண்டுள்ள முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மற்றும் நத்தம் தொகுதி எம்.எல்.ஏ. நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் கட்சியில் இருந்து விலக முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தொண்டாமுத்தூர் தொகுதிக்குட்பட்ட தனது ஆதரவாளர்களுடன் எஸ்.பி. வேலுமணி சமீபத்தில் ஆலோசனை நடத்தியுள்ளார். அப்போது, சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக ஓ. பன்னீர்செல்வத்தை மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தியதாகவும், ஆனால் எடப்பாடி பழனிசாமி அதை ஏற்க மறுத்ததால் தேர்தலில் பெரும் தோல்வி ஏற்பட்டதாகவும் அவர் உருக்கமாக பேசியதாக கூறப்படுகிறது. மேலும், தனது ஆதரவாளர்களுக்கு எடப்பாடி பழனிசாமி பதவி வழங்குவது தொடர்பாக எந்த உத்தரவாதமும் அளிக்கவில்லை என்றும், தற்போது தனக்கு அளிக்கப்பட்டிருக்கும் 'டம்மி' பதவி குறித்தும் வேலுமணி கடும் அதிருப்தியில் இருப்பதாக தெரிகிறது.
ஏற்கனவே அதிமுகவில் இருந்து முக்கிய நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் தற்போதைய எம்.எல்.ஏ.க்கள் பலர் விலகிச் சென்றுள்ள நிலையில், எஸ்.பி. வேலுமணியும் கட்சியிலிருந்து வெளியேற திட்டமிட்டுள்ளதாக செய்திகள் பரவி வருகின்றன. தமிழக வெற்றி கழகம் மற்றும் திமுக ஆகிய இரு கட்சிகளுடனும் வேலுமணி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், எந்த கட்சியில் இணைவது என்பது குறித்து அவர் ஆலோசித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இதேபோல், எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியில் உள்ள முன்னாள் அமைச்சரும், நத்தம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான நத்தம் விஸ்வநாதனும் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றி கழகத்தில் இணைய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.