தமிழ் சினிமாவில் பல காமெடி நடிகர்கள் இருந்தாலும், இவரின் நகைச்சுவைக்கு தனி வரவேற்பு உண்டு. வடிவேலுடன் இவர் நடித்த 'மாயி' படத்தின் காமெடி காட்சிகள் இன்றும் பலரால் ரசிக்கப்படுகிறது. 'வாம்மா மின்னல்' என இவர் அடித்த காமெடி பலரின் ஃபேவரைட். யாருக்காவது ஜாமீன் கிடைக்கவில்லை என்றால், 'வாளமீன் இருக்குங்குறாங்க வஞ்சிர மீன் இருக்குங்குறாங்க. ஆனா, ஜாமீன் மட்டும் இல்லைங்குறாங்க' என்ற இவரது வசனத்தை மீம்ஸ்களாக நெட்டிசன்கள் வைரலாக்குவார்கள்.
அப்படிப்பட்ட நடிகர் பாவா லட்சுமணன் தற்போது நீரிழிவு நோயாலும், பொருளாதார நெருக்கடியாலும் பாதிக்கப்பட்டு தவித்து வருகிறார். உடல்நலப் பிரச்சினையால் அவரது கால் விரல்களில் சில அகற்றப்பட்டதாகவும், இதனால் திரைப்பட வாய்ப்புகள் குறைந்ததாகவும் அவர் பல்வேறு பேட்டிகளில் தெரிவித்துள்ளார். சமீபத்தில் அளித்த பேட்டியில், ஒரு விபத்துக்குப் பிறகு ஏற்பட்ட தொற்று காரணமாக காலில் பாதிப்பு ஏற்பட்டதாகவும், தன்னால் நடக்க முடியாது என்ற வதந்தி பரவியதால் வாய்ப்புகள் குறைந்ததாகவும் பாவா லட்சுமணன் கூறியிருந்தார்.
தற்போது நிரந்தரமாக தங்குவதற்கு வீடுகூட இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், மருத்துவ செலவுகளை சமாளிக்க முடியாமல் தவித்து வருவதாகவும் அவர் கண்ணீருடன் தெரிவித்திருந்தார். அவரது நிலை குறித்த தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவியதைத் தொடர்ந்து பலரும் உதவிக்கரம் நீட்டத் தொடங்கினர். முக்கியமாக, லெஜண்ட் சரவணன் ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார். இது திரையுலகில் வரவேற்பைப் பெற்றுள்ளது. மருத்துவச் செலவுகளுக்காக வழங்கப்பட்ட இந்தத் தொகை, தற்போது சிகிச்சை பெற்று வரும் பாவா லட்சுமணனுக்கு உடனடி உதவியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
குடும்பத்தைப் பற்றி பேசிய அவர், 'எனக்குத் திருமணமே ஆகவில்லை; ஒருவேளை மனைவி, பிள்ளைகள் என்று குடும்பம் இருந்திருந்தால் நான் ஏன் மற்றவர்களிடம் கையேந்தி உதவி கேட்கப் போறேன்? எனக்கு இருக்கும் ஒரேயொரு அக்காவும் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு பொருளாதார வசதியுடன் இல்லை. வேறு வழியின்றி திரைத்துறையைச் சேர்ந்தவர்கள் எனக்கு ஏதாவது உதவி செய்ய மாட்டார்களா என்று ஆவலோடு எதிர்பார்க்கிறேன்' எனத் தனது தற்போதைய வறுமை நிலை மற்றும் தனிமை குறித்து உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.