சாகர் மாவட்டத்தில் 19 மாதக் குழந்தை வினய் விஸ்வகர்மா, கடுமையான சளி, இருமல் மற்றும் கண்களில் லேசான சிவத்தல் காரணமாக மே 29 அன்று அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டது. அங்கு, குழந்தைக்கு சளிக்காக கொடுக்க வேண்டிய மூக்கு சொட்டு மருந்தை, தவறுதலாக மருத்துவர் குழந்தையின் இரண்டு கண்களிலும் ஊற்றியுள்ளார். மேலும், பாராசிட்டமால் சிரப் மற்றும் ஒரு ஊசியும் போடப்பட்டுள்ளது.
மருந்து ஊற்றப்பட்ட சில மணி நேரங்களிலேயே குழந்தையின் நிலைமை மோசமடையத் தொடங்கியது. இரு கண்களும் வீங்கியதால் குழந்தை கதறி அழுதது. நீண்ட நேரம் காத்திருந்தும் முன்னேற்றம் ஏற்படாததால், முதலில் சாகர் அரசு மருத்துவமனைக்கும், பின்னர் மேல் சிகிச்சைக்காக போபால் எய்ம்ஸ் மருத்துவமனைக்கும் குழந்தை மாற்றப்பட்டது.
போபால் எய்ம்ஸ் மருத்துவமனையில் பரிசோதனை செய்த நிபுணர்கள், குழந்தையின் இரண்டு கண்களின் பார்வையும் முற்றிலும் பறிபோய்விட்டதாகவும், அதை சரிசெய்ய முடியாது என்றும் பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். தவறான சிகிச்சை மற்றும் மருத்துவக் குறைபாடே இந்த பார்வை இழப்புக்குக் காரணம் என எய்ம்ஸ் மருத்துவர்கள் சுட்டிக்காட்டியுள்ளதாக குழந்தையின் தந்தை புகார் அளித்துள்ளார்.
இந்த துயரச் சம்பவம், மருத்துவ அலட்சியத்தால் ஒரு குழந்தையின் எதிர்காலம் எவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளது என்பதை எடுத்துக்காட்டுகிறது. பெற்றோரின் புகாரின் அடிப்படையில் உரிய விசாரணை நடைபெற்று வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.