புனே மாவட்டத்தில் மே 1 அன்று 3 வயது சிறுமி கடத்தப்பட்டு, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இக்கொலை வழக்கில் பீம்ராவ் காம்ப்ளே, 65, என்பவர் கைது செய்யப்பட்டார்.
இந்தக் கொடூர சம்பவம் நாடு முழுவதும் போராட்டங்களை தூண்டியது. உடனடியாக மஹாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், சிறப்பு அரசு வழக்கறிஞராக அஜய் மிசாரை நியமித்து, இந்த வழக்கின் விசாரணையை விரைவுபடுத்த உத்தரவிட்டார். இதன் விளைவாக, போலீசார் வெறும் 15 நாட்களுக்குள் 82 சாட்சிகளின் பெயர்களுடன் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர்.
குற்றம் நடந்து சரியாக 55 நாட்களுக்குப் பிறகு, இன்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 3 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமாக கொலை செய்த குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த வழக்கை 'அரிதானவற்றில் அரிதானது' என வகைப்படுத்தி நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.
பாதிக்கப்பட்டவர் தரப்பு வழக்கறிஞர் விபுல் துஷிங் கூறுகையில், 'இந்த குற்றத்தின் தன்மை மிகவும் கொடூரமானது. குற்றம் சந்தேகத்திற்கு இடமின்றி ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டிருப்பதை கருத்தில் கொண்டு, நீதிமன்றம் இதனை 'அரிதிலும் அரிதான' வழக்கு என வகைப்படுத்தி குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்துள்ளது,' என தெரிவித்தார். இந்த விரைவான தீர்ப்பு பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ஒருவித நீதியை வழங்கியுள்ளது.