கோவை, வெள்ளக்கிணறு முக்கியச் சாலையில் பாதாள சாக்கடைப் பணிகள் நடைபெற்று வந்தன. பணிகள் முடிந்த நிலையில், தோண்டப்பட்ட பள்ளங்களை மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் மற்றும் ஊழியர்கள் முறையாக மூடாமல், வெறும் மண்ணை மட்டும் கொட்டி அரைகுறையாக விட்டுச் சென்றுள்ளனர்.
இந்நிலையில், அதிக எடையுடன் வந்த கனரக லாரி ஒன்று அந்த சாலையைக் கடக்க முயன்றபோது, மண்ணுக்குள் அதன் சக்கரங்கள் இறங்கி 'லாக்' ஆனது. லாரியின் பின் சக்கரங்கள் பாதாள சாக்கடைக் குழிக்குள் இறங்கியதால், லாரி ஒருபுறமாகச் சாய்ந்தது.
பருவமழை காலம் நெருங்கி வரும் நிலையில், மாநகராட்சி நிர்வாகம் பாதாள சாக்கடைப் பள்ளங்களை முறையாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல், பெரிய விபத்துகள் நேரிடும் என பொதுமக்கள் எச்சரித்துள்ளனர்.
மாநகராட்சி நிர்வாகத்தின் அலட்சியத்தால் ஏற்பட்ட இந்த விபத்து, அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உரிய முறையில் பள்ளங்களை மூடாததால், வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.