கர்நாடகாவில் முன்னாள் காதலியுடன் சேர்ந்து தற்கொலைக்கு முயன்ற இளைஞர் ஒருவர், காரில் தீப்பிடித்து கருகி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகேந்திரா என்ற இளைஞர், வாடகை கார் ஒன்றை ஏற்பாடு செய்து, அதில் வெடிகுண்டுகளைப் பொருத்தி, தனது முன்னாள் காதலியை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றுள்ளார். துமகுரு மாவட்டம், ஜோகிஹள்ளி தேசிய நெடுஞ்சாலையில் கார் சென்று கொண்டிருந்தபோது, திடீரென கார் வெடித்து தீப்பிடித்து எரிந்துள்ளது.
தீ விபத்தில் இருந்து அதிர்ஷ்டவசமாக தப்பிய முன்னாள் காதலி, காரில் இருந்து கீழே குதித்து உயிர் பிழைத்துள்ளார். இந்த விபத்தில் கார் ஓட்டுநர் படுகாயமடைந்துள்ளார். சம்பவ இடத்திலேயே, 30 வயதான நாகேந்திரா தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தார். காயமடைந்த முன்னாள் காதலியும், வாடகை கார் ஓட்டுநர் பிரவீனனும் உடனடியாக துமகூரு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில், நாகேந்திராவும் பெங்களூருவில் அறுவை சிகிச்சை தொழில்நுட்ப வல்லுநராகப் பணிபுரியும் பெண்ணும் சில காலமாக காதலித்து வந்ததும், சமீபத்தில் அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்ததும் தெரியவந்துள்ளது. நாகேந்திராவின் அழைப்புகளை அந்தப் பெண் தவிர்த்து வந்ததாகக் கூறப்படுகிறது. சனிக்கிழமை காலை பெங்களூரு ஜெயநகரில் உள்ள அப்பெண்ணின் வீட்டில் நடந்த வாக்குவாதத்திற்குப் பிறகு, நாகேந்திரா அவரை வாடகை காரில் வலுக்கட்டாயமாக கடத்திச் சென்றதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, பெண் காணாமல் போனதை அடுத்து அவரது பெற்றோர் ஜெயநகர் காவல் நிலையத்தில் கடத்தல் புகார் அளித்துள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.