மும்பையில், பழைய கார்களை வாங்கி விற்கும் தொழிலில் ஈடுபட்டு வந்த மோகித் சோனி என்ற இளைஞர், பரிசோதனையின் போது கார் ஏர்பேக் வெடித்ததில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மீரா-பயந்தர் சாலையில், பிளசண்ட் பார்க் சொசைட்டி அருகே, 15 ஆண்டுகள் பழமையான ஒரு காரை மோகித் சோனி ஆய்வு செய்து கொண்டிருந்தார். அப்போது, காரின் இருக்கைக்கு அருகே இருந்த ஏர்பேக் திடீரென வெடித்து வேகமாக விரிவடைந்தது. இந்த ஏர்பேக், மோகித் சோனியின் கழுத்துப் பகுதியில் பலமாக தாக்கியதில், அவர் படுகாயமடைந்து காரிலேயே மயங்கி விழுந்தார்.
அருகில் சென்றவர்கள் மோகித் சோனியை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். மோகித் சோனியின் உடலை பிரேத பரிசோதனைக்காக பண்டிட் பீம்சென் ஜோஷி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், மோகித் சோனி அந்த காரை வேறொருவருக்கு விற்பனை செய்வதற்காக ஆய்வு செய்து கொண்டிருந்தபோது, காரின் ஏர்பேக் வெடித்து இந்த விபத்து ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது. ஏர்பேக் வேகமாக வந்து மோகித் சோனியின் கழுத்தின் வலது பக்கத்தில் பலமாக தாக்கியுள்ளது. இருப்பினும், அவரது மரணத்திற்கான துல்லியமான காரணம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.