முன்னாள் திமுக அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தியுள்ள நிலையில், கடந்த திமுக ஆட்சியில் நடந்த மேலும் பல ஊழல்கள் குறித்தும் விசாரணை நடத்த வேண்டும் என 'வீ த லீடர்ஸ்' அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
கடந்த 2022-ஆம் ஆண்டு வழங்கப்பட்ட சாலை ஒப்பந்தங்களில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறி, முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவுக்குச் சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தியது. இந்த நடவடிக்கையை வரவேற்றுள்ள அண்ணாமலை, தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படுவார்கள் என நம்புவதாகத் தெரிவித்துள்ளார்.
இதேபோல், கடந்த 5 ஆண்டுகளில் வெளிச்சத்துக்கு வந்த பல ஊழல்கள் குறித்தும் தவெக அரசு உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார். குறிப்பாக, பிஜிஆர் எனர்ஜி ஊழல், ஊட்டச்சத்து பெட்டக ஊழல், பொங்கல் வேட்டி ஊழல், போக்குவரத்துத் துறை ஊழல்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள் கொள்முதல் முறைகேடு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட முறைகேடுகள் போன்றவற்றை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
மேலும், உதயநிதி ஸ்டாலினின் ரசிகர் மன்றமும், 'நோபல் ஸ்டீல்ஸ்' நிறுவனமும் ஒரே முகவரியில் இயங்குவது குறித்தும், முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் துபாய் பயணத்திற்குப் பிறகு நோபல் ஸ்டீல்ஸ் நிறுவனம் தமிழகத்தில் ரூ.1,000 கோடி முதலீடு செய்வதாக அறிவித்தது (அந்த முதலீடு இன்னும் அறிவிப்பு அளவிலேயே உள்ளது) குறித்தும் விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். இந்த மர்மங்கள் குறித்தும் தவெக அரசு துப்புத் துலக்கும் என நம்புவதாகவும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.