தமிழ்நாட்டிற்கான டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக கர்நாடகத்தைச் சேர்ந்த வெங்கட் நாராயணனை தவெக அரசு நியமித்திருப்பது அதிர்ச்சியளிப்பதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், 'தனது திரைப்படத்தைத் தயாரித்தாரெனும் ஒற்றைக் காரணத்திற்காக, முக்கியத்துவம் வாய்ந்த ஒரு அரசுப் பொறுப்பில் தமிழர் அல்லாத ஒருவரை முதல்வர் விஜய் நியமித்திருப்பதை ஏற்க முடியாது. இதை வன்மையாக எதிர்க்கிறேன்' என்று கூறியுள்ளார்.
காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டும் விவகாரத்தில் தமிழ்நாடு போராடி வரும் சூழலில், கர்நாடகாவைச் சேர்ந்த ஒருவரை டெல்லிக்கான தமிழ்நாட்டுப் பிரதிநிதியாக நியமிப்பது வெட்கக்கேடானது என்றும், தமிழே அறியாதவர்களைப் பிரதிநிதியாக நியமிப்பது தமிழர்களை இழிவுபடுத்தும் செயல் என்றும் சீமான் குறிப்பிட்டுள்ளார்.
இது தவெக அரசு செய்யும் வெளிப்படையான அதிகார முறைகேடு என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். எனவே, வெங்கட் நாராயணனை உடனடியாக அப்பொறுப்பிலிருந்து விடுவித்து, தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவரை நியமிக்க வேண்டும் என தவெக அரசை அவர் வலியுறுத்தியுள்ளார்.