தேசிய போலியோ சொட்டு மருந்து முகாம் வரும் ஜூன் 28, ஞாயிற்றுக்கிழமை அன்று தமிழ்நாடு முழுவதும் நடைபெற உள்ளது. மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்கள் என மொத்தம் 43,051 மையங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும்.
இந்த முகாம்களில் 0 முதல் 5 வயதுக்குட்பட்ட 52.91 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தேசிய தடுப்பூசி அட்டவணைப்படி ஏற்கனவே தடுப்பூசி பெற்றிருந்தாலும், முகாம் நாளில் மீண்டும் சொட்டு மருந்து வழங்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முகாம் நடைபெறும் நாட்களில் முக்கியப் பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், சுங்கச் சாவடிகள், சோதனைச் சாவடிகள் மற்றும் விமான நிலையங்களில் தற்காலிக மையங்கள் அமைக்கப்பட்டு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும். முகாம் மையங்கள் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும். முதல் நாளான 28.06.2026 அன்று அனைத்து முகாம்களிலும், அடுத்த இரண்டு நாட்களான 29.06.2026 மற்றும் 30.06.2026 ஆகிய தேதிகளில் தற்காலிக மையங்களிலும் சொட்டு மருந்து வழங்கப்படும்.
பிற மாநிலங்களிலிருந்து வந்து தமிழ்நாட்டில் வசிக்கும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கும், நடமாடும் மருத்துவக் குழுக்கள் மூலம் தொலைதூர மற்றும் மலைவாழ் பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இப்பணியில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட சுகாதாரப் பணியாளர்கள், அங்கன்வாடிப் பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். எனவே, பெற்றோர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி தங்கள் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்தை இட்டுக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.