தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்படுமா என்ற கேள்விக்கு அமைச்சர் நிர்மல் குமார் நல்ல செய்தியை வெளியிட்டுள்ளார். மின்சார வாரியத்தின் நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கையை அவர் வெளியிட்டார். அதில், மின்சார வாரியத்திற்கு ரூ.2.47 லட்சம் கோடி கடன் சுமை இருப்பதாகவும், கடந்த திமுக ஆட்சியில் மின்சாரத்துறையில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாகவும் குற்றஞ்சாட்டினார்.
செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நிர்மல் குமார், 'மின்கட்டணம் உயர்த்தப்படும்போது அதே அளவுக்கு செலவினங்களும் உயர்த்தப்படுகின்றன. ஆனால், கட்டமைப்புகள் பலப்படுத்தப்படவில்லை, புதிய பணியாளர் தேர்வும் மேற்கொள்ளப்படவில்லை' என்று சுட்டிக்காட்டினார். 2021-2026 காலகட்டத்தில் மின்வாரியத்துக்கான செலவு ரூ.5.32 லட்சம் கோடியாகவும், வருமானம் ரூ.4.97 லட்சம் கோடி எனவும் அவர் தெரிவித்தார். தற்போது மின்வாரியத்தின் பற்றாக்குறை ரூ.34,447 கோடி என்றும் அவர் குறிப்பிட்டார்.
மின்வாரியத்தில் 74,174 ஊழியர்கள் பணியில் இருப்பதாகவும், ஆனால் 140,635 ஊழியர்கள் தேவை இருப்பதாகவும் அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்தார். 'மின்வாரிய வரலாற்றிலேயே கடந்த ஆட்சிக் காலத்தில்தான் அதிக வருவாய் ஈட்டப்பட்டு, அதேநேரம் செலவும் அதிகமாகச் செய்யப்பட்டது. இவ்வளவு வரவு இருந்து, செலவும் செய்து, கடனும் வாங்கி உள்கட்டமைப்புகள் பெரிதாக மேம்படுத்தப்படவில்லை' என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.
எனினும், நடப்பாண்டு மின்கட்டணத்தை உயர்த்தப் போவதில்லை என்றும், மின்சேமிப்புத் திறனை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் நிர்மல் குமார் உறுதி அளித்துள்ளார். இதனால், பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.