இந்திய சினிமாவின் முன்னணி எடிட்டரான ஸ்ரீகர் பிரசாத், 40 ஆண்டுகளுக்கும் மேலாக திரைத்துறையில் தனது முத்திரையைப் பதித்து வருபவர். தற்போது, உலக சினிமா துறையின் உயரிய அமைப்புகளில் ஒன்றான ஆஸ்கர் விருது குழுவில் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, உலகளாவிய அங்கீகாரத்தைப் பெற்றுள்ளார். இந்த மகத்தான சாதனைக்காக, தென்னிந்திய திரைப்பட படத்தொகுப்பாளர் சங்கம் (SIFEA) அவருக்கு மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக, SIFEA வெளியிட்டுள்ள அறிக்கையில், 'உலக திரைப்படத் துறையின் உயரிய அமைப்புகளில் ஒன்றான அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் (OSCAR) உறுப்பினராக உங்களை நியமித்ததற்காக, தென்னிந்திய திரைப்பட படத்தொகுப்பாளர் சங்கம் சார்பில் இதயம் கனிந்த பாராட்டுகளையும் மனமார்ந்த வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்' என்று குறிப்பிட்டுள்ளது.
படத்தொகுப்புத் துறையில் ஸ்ரீகர் பிரசாத் வெளிப்படுத்தி வரும் சிறப்பான திறமை, அர்ப்பணிப்பு மற்றும் நீண்டகால பங்களிப்பிற்கான சர்வதேச அங்கீகாரமாக இந்த பெருமை அமைந்துள்ளது. இவரது இந்த சாதனை, தென்னிந்திய திரைப்பட தொகுப்பாளர்கள் சங்கத்திற்கே பெருமை சேர்ப்பதாக அமைந்துள்ளது.
தங்களது இந்த மகத்தான சாதனையை நமது சங்கம் பெருமையுடன் பாராட்டுகிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் இந்த அங்கீகாரம், இந்திய சினிமாவுக்கும், குறிப்பாக தென்னிந்திய படத்தொகுப்புத் துறைக்கும் ஒரு மைல்கல்லாக அமைந்துள்ளது.