முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய 13 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடைபெற்று வரும் நிலையில், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது வீட்டின் முன் திமுகவினர் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். 'ஆ.ராசா வந்துள்ளார், கேட்டை திறங்கள்' என அவர்கள் கோஷமிட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. திமுக எம்பி ஆ.ராசா, சோதனை நடைபெறும் எ.வ.வேலுவை சந்திக்க அவரது வீட்டிற்கு வந்தபோது, கதவு திறக்கப்படாததால் சிறிது நேரம் வெளியே காத்திருக்க நேர்ந்தது. பின்னர், ஆ.ராசாவின் உதவியாளர் பாதுகாப்பு அதிகாரிகளிடம் கூறியதையடுத்து, போலீசார் அவரை வீட்டிற்குள் அனுமதித்தனர்.
முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு உள்ளிட்ட 11 பேர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. அறப்போர் இயக்கம் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கரூரில் சாலை அமைக்காமலேயே சாலை அமைத்ததாகக் கூறி, சுமார் ரூ.3.20 கோடி ஊழல் செய்ததாக எ.வ.வேலு மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதன் காரணமாக, எ.வ.வேலு மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் 10 பேர் மீது கூட்டுச்சதி, ஊழல் தடுப்புச் சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில், எ.வ.வேலுவின் வீடு உட்பட தொடர்புடைய 13 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். சோதனை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, எம்பி ஆ.ராசா அவரைச் சந்திக்கச் சென்றார். ஆனால், கதவு திறக்கப்படாததால், அவர் சிறிது நேரம் வெளியே காத்திருக்க வேண்டியிருந்தது. ஆ.ராசாவின் உதவியாளர், 'எம்பி வெளியே காத்திருக்கிறார், உடனடியாக கதவைத் திறக்கச் சொல்லுங்கள்' என பாதுகாப்பு அதிகாரிகளிடம் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, சிறிது நேரத்திற்குப் பிறகு எ.வ.வேலுவின் வீட்டிற்குள் ஆ.ராசாவை போலீசார் அனுமதித்தனர். கேட்டிற்கு வெளியே காத்திருந்த அவர், போலீசார் அனுமதித்தவுடன் வீட்டிற்குள் சென்றார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பதற்றம் நிலவியது.