தமிழகத்தில் இந்த ஆண்டு மின் கட்டணம் உயர்த்தப்படாது என்று மின்துறை அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார். அனைத்து நுகர்வோருக்கும் இந்த அறிவிப்பு பொருந்தும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மின்வாரியத்தின் செலவினங்கள் மற்றும் வருவாய் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், மின்வாரியத்தில் செலவினங்கள் இருந்தபோதிலும், மக்களுக்கு அதன் பலன்கள் சென்றடையவில்லை என அமைச்சர் நிர்மல் குமார் கூறியுள்ளார். மேலும், த.வெ.க. ஆட்சி அமையவில்லை என்றால் மின்வாரியம் தனியார் மயமாக்கப்பட்டிருக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். மின்வாரியத்தை மேம்படுத்தும் பணிகளில் ஈடுபட உள்ளதாகவும் அவர் உறுதியளித்துள்ளார்.
தற்போது மின் கட்டணம் உயர்த்தப்படும்போது, அதே அளவுக்கு செலவினங்களும் அதிகரிக்கின்றன. ஆனால், கட்டமைப்புகள் பலப்படுத்தப்படவில்லை என்றும், புதிய பணியாளர் தேர்வு மேற்கொள்ளப்படவில்லை என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். மின்வாரியத்தில் குறுகிய கால ஒப்பந்தங்கள் மூலம் அதிக விலைக்கு மின்சாரம் வாங்கப்படுவதாகவும், இதை நீண்ட கால ஒப்பந்தங்களாக மாற்றுவதன் மூலம் விலையை குறைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதன் மூலம் மாதந்தோறும் 215 கோடி ரூபாய் சேமிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
2000-ம் ஆண்டுகளில் சுமார் 1 லட்சம் பேர் மின்வாரியத்தில் பணிபுரிந்தனர். இத்தனை ஆண்டுகளில் மின் தேவை, கட்டமைப்புகள், மின்வாரியத்தின் வருவாய் அனைத்தும் அதிகரித்திருந்தாலும், பணியிடங்கள் இரட்டிப்பாகியிருக்க வேண்டும். ஆனால், தற்போது 74,000 பேர் மட்டுமே பணிபுரிவதாகவும், இது 25 ஆண்டுகளுக்குப் பிறகு 30 ஆண்டுகள் பின்னோக்கிச் சென்றதற்கு சமம் என்றும் அமைச்சர் நிர்மல் குமார் வருத்தம் தெரிவித்தார்.
மின்வாரியத்தை மேம்படுத்தவும், நுகர்வோருக்கு பலன் கிடைக்கும் வகையிலும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார். மின் கட்டண உயர்வு குறித்த அச்சம் தேவையில்லை என்றும், வாரியத்தின் நிதிநிலையை சீரமைக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.