சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை நடத்தி வருகிறது. இந்த சோதனை சென்னை மட்டுமின்றி, திருவண்ணாமலையில் உள்ள அவரது வீடு மற்றும் அலுவலகம் உட்பட மொத்தம் 13 இடங்களில் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தற்போது நடைபெற்று வரும் இந்த சோதனையானது எந்த வழக்கு தொடர்பாக மேற்கொள்ளப்படுகிறது என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. சோதனைகள் நிறைவடைந்த பின்னரே இது குறித்த விரிவான தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, கடந்த 2021 முதல் 2026 வரையிலான திமுக ஆட்சிக் காலத்தில் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக எ.வ.வேலு பதவி வகித்து வந்துள்ளார். அவரது பணிக்காலத்தில் நடைபெற்றதாக கூறப்படும் முறைகேடுகள் தொடர்பாக இந்த சோதனை நடைபெறுவதாக கூறப்படுகிறது.
லஞ்ச ஒழிப்புத்துறையின் இந்த திடீர் நடவடிக்கையால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், இது தொடர்பாக மேலதிக தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.