பயங்கரவாத தாக்குதலில் வீர மரணமடைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் தியாகத்தை போற்றும் வகையில், வேளச்சேரி – தாம்பரம் பிரதான சாலைக்கு 'மேஜர் முகுந்த் வரதராஜன் சாலை' என பெயர் சூட்டி முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார். இந்த அறிவிப்பால் நெகிழ்ந்துபோன மேஜர் முகுந்த் வரதராஜனின் பெற்றோர், முதல்வர் விஜய்க்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளனர். தாய் நாட்டிற்காக உயிர்தியாகம் செய்த மேஜர் முகுந்த வரதராஜனுக்கு இந்திய அரசின் உயரிய விருதான அசோக சக்ரா விருது வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இந்திய ராணுவத்தில் திறம்படப் பணியாற்றி, பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளின்போது வீரமரணம் அடைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் தியாகத்தைப் போற்றும் வகையில், தாம்பரம் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட தாம்பரம் ரயில் நிலையத்திலிருந்து வேளச்சேரி வரையிலான சாலைக்கு “மேஜர் முகுந்த் வரதராஜன் சாலை” எனப் பெயர் சூட்ட வேண்டும் என இந்திய ராணுவத்தின் தென்னிந்திய பகுதிகளுக்கான தளபதி லெப்டினண்ட் ஜெனரல் வி.ஶ்ரீஹரி, முதல்வர் விஜய்யை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கோரிக்கையை கனிவுடன் பரிசீலித்த முதல்வர் விஜய், உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அதனடிப்படையில், தாம்பரம் ரயில் நிலையத்திலிருந்து வேளச்சேரி வரையிலான சாலைக்கு, வீரரின் தியாகத்தைப் போற்றும் வகையில், தமிழில் “மேஜர் முகுந்த் வரதராஜன் சாலை” எனவும், ஆங்கிலத்தில் “MAJOR MUKUND VARADARAJAN SALAI” எனவும் பெயர் சூட்டுவதற்கான அரசாணை 23.06.2026 அன்று வெளியிடப்பட்டுள்ளது.
தாம்பரம் மண்ணின் மைந்தரான மேஜர் முகுந்த் வரதராஜன், கிழக்கு தாம்பரத்தில் வசிக்கும் அவரது பெற்றோர் இந்த அறிவிப்பால் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த நடவடிக்கை ராணுவ வீரர்களின் தியாகத்தை போற்றும் வகையில் அமைந்துள்ளது என்றும், முதல்வர் விஜய்க்கு மனமார்ந்த நன்றி என்றும் அவர்கள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். 'அவர் ஆட்சி நல்லா இருக்கனும்' என்றும் அவர்கள் வாழ்த்தினர். மேஜர் முகுந்த் வரதராஜனின் பெற்றோர் பேசிய உருக்கமான வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.