தமிழகத்தில் இனி ஒவ்வொரு புதன் மற்றும் சனிக்கிழமைகளிலும் பொதுமக்கள் குறைதீர்ப்பு நாள் நடைபெறும் என சட்டம்-ஒழுங்கு காவல்துறை தலைமை இயக்குநர் மகேஷ் குமார் அகர்வால் IPS அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறும் இந்த சிறப்பு முகாமில், மக்கள் தங்கள் குறைகளை நேரடியாக உயர் அதிகாரிகளிடம் தெரிவித்து உடனடி தீர்வு பெறலாம்.
இந்த புதிய திட்டத்தின்படி, வாரத்தில் இரண்டு நாட்கள் பொதுமக்கள் தங்களின் புகார்களை காவல் நிலையங்கள் மற்றும் உரிய அலுவலகங்களில் உள்ள உயர் அதிகாரிகளிடம் நேரடியாக மனுக்களாக அளிக்கலாம். நீண்ட நாள் தீர்க்கப்படாத பிரச்சினைகள் மற்றும் நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து உயர் அதிகாரிகளைச் சந்தித்துப் பேச விரும்பும் எளிய மக்களுக்காக இந்த சிறப்பு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. பெறப்படும் அனைத்து மனுக்கள் மீதும் முறையான விசாரணை நடத்தி, குறிப்பிட்ட காலவரையறைக்குள் தீர்வு காண வேண்டும் என்றும், இதில் எவ்வித தொய்வும் இருக்கக் கூடாது என்றும் அனைத்து காவல் அதிகாரிகளுக்கும் டிஜிபி கடுமையான உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
காவல்துறை அதிகாரிகள் வழக்கு விசாரணை, நீதிமன்றப் பணிகள், அவசரக் கூட்டங்கள் அல்லது சட்டம்-ஒழுங்கு பாதுகாப்பு பணிகளுக்குச் சென்றுவிடுவதால், கிராமங்களில் இருந்து வரும் ஏழை மக்கள் அவர்களைச் சந்திக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்புவதைத் தடுக்கவே இந்த அட்டவணை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதன்படி, காவல் நிலைய அதிகாரிகள், காவல்துறை துணைக் கண்காணிப்பாளர்கள், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள், காவல்துறை துணைத் தலைவர்கள், காவல்துறை தலைவர்கள், மாநகர காவல் ஆணையர்கள் உள்ளிட்ட அனைத்து நிலை அதிகாரிகளும் இந்த குறைதீர்ப்பு நேரத்தில் கட்டாயம் தங்களது இருக்கையில் இருக்க வேண்டும் என டிஜிபி உத்தரவிட்டுள்ளார். தவிர்க்க முடியாத காரணங்களால் அதிகாரிகள் அலுவலகத்தில் இருக்க முடியாத சூழல் ஏற்பட்டால், தங்களுக்கு அடுத்த நிலையில் உள்ள தகுதியான அதிகாரியைப் பொதுமக்கள் குறைதீர்ப்புப் பணிக்காகப் பொறுப்பில் அமர்த்திவிட்டுச் செல்ல வேண்டும் என்றும், எந்தக் காரணத்தைக் கொண்டும் பொதுமக்கள் மனுக்களைக் கொடுக்க வந்துவிட்டு ஏமாற்றத்துடன் திரும்பக் கூடாது என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
மேலும், மனுக்களைப் பெறுவதோடு மட்டுமின்றி, காவல் நிலையங்களுக்கு வரும் பொதுமக்களிடம் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் மிகவும் கண்ணியமாகவும், கனிவாகவும், மரியாதையுடனும் நடந்து கொள்ள வேண்டும் என்றும் டிஜிபி அறிவுறுத்தியுள்ளார். பெறப்படும் ஒவ்வொரு மனுவின் மீதும் ஒரு குறிப்பிட்ட காலவரையறைக்குள் உரிய விசாரணை நடத்தி சம்மந்தப்பட்ட மக்களுக்குப் போர்க்கால அடிப்படையில் தீர்வு காணப்பட வேண்டும். இந்த பொதுமக்கள் குறைதீர்ப்புத் திட்டத்தின் கீழ் மாவட்ட வாரியாக அதிகாரிகள் எவ்வாறு செயல்படுகிறார்கள், அவர்களின் வருகைப் பதிவு மற்றும் புகார்களின் மீதான எடுக்கப்படும் நடவடிக்கைகள் அனைத்தும் சென்னை தலைமை காவல்துறை தலைமையகம் மூலம் நேரடியாகவும், ரகசியமாகவும் கண்காணிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அதிரடி உத்தரவு பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.